அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. கடந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு அவர் விடாமுயற்சி படத்தில் நடிக்கப் போவதாக உடனடியாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடந்த ஆண்டு மே மாதம் இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதோடு சரி, படத்திற்கான அடுத்த அப்டேட் வெளி வரவே இல்லை. அஜித்தும் எதையும் கண்டுகொள்ளாமல் பைக் டூர் சென்று விட்டார்.
இப்படி இலவு காத்த கிளியாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அக்டோபர் மாதம் தான் நல்ல செய்தி கிடைத்தது. அதன்படி அஜர்பைஜான் நாட்டில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அஜித்துடன் இணைந்து, திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, எப்போது முடிவடைந்தது என்றே தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இதன் சூட்டிங் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும் சில போர்ஷன்கள் இந்தியாவில் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
படத்தில் அஜித்திற்கு திரிஷா மனைவியாக நடிப்பதாகவும், அவரை ஒரு கும்பல் கடத்த அதனை அஜித் தேடி கண்டுபிடிப்பதும் தான் இந்த திரைப்படத்தின் ஒற்றைக் கதைக்களம் என்று கூறப்பட்டது. இதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் எப்படியாவது பொங்கலுக்கு ரிலீசாகி விடும் என்று அஜித் ரசிகர்கள் நம்பி இருந்தனர்.
இப்படியான சூழலில் விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து அடுத்த கட்ட அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் இந்தப் பணியே இப்போது தான் தொடங்குகிறதா அப்படி என்றால் எப்போது படம் ரிலீஸ் ஆகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.





