தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்த படம் வெளியாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி காட்டினார். பல லட்சம் மக்கள் மாநாட்டில் திரண்டனர்.
அந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், 48 நிமிடங்கள் தனது கட்சியின் கொள்கைகள், அரசியலில் அவரது எதிர்கால திட்டங்கள், இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நிலை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் விளக்கி பேசினார். அப்போது திமுகதான் எனக்கு இனி அரசியல் எதிரி என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
அப்போது விஜய், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நான் எனது அதிகபட்ச ஊதியத்தை விட்டுவிட்டு மக்களாகிய உங்களை நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறேன். என்னை வாழ வைத்த உங்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், அரசியலுக்கு வந்த விஜய் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவரது மனைவி நடிகை ராதிகா, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நடிகர் விஜய் குறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில், சமத்துவ மக்கள் கட்சியை துவங்கி நான் அரசியலுக்கு வந்த போது விஜயை போல நானும் உச்சத்தில் இருந்தவன்தான். நாட்டாமை, சூரியவம்சம் படங்களால் பெரிய ஹீரோவாக முன்னணியில் இருந்தவன்தான். விஜய் வீட்டில் அனைவரும் இந்தி பேசுகின்றனர். ஆனால் அவர் இந்தியை எதிர்க்கிறார். விஜய்க்கு நீட், மொழி கொள்கை குறித்து எல்லாம் புரிதல் இல்லை என்றும் சரத்குமார் விமர்சித்துள்ளார். இது தவெக கட்சியினரை கடுப்படைய செய்துள்ளது.





