நடப்பாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டது. தொடர் தோல்வி திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த திரைப்படம் மகாராஜா.
அதற்கு முன்பு வில்லன் மற்றும் குண சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே விஜய் சேதுபதி மாறி மாறி நடித்து கவனத்தை செலுத்தி வந்தார். இப்படியான சூழலில் தான், தனது ஐம்பதாவது திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கையில் ஒப்படைத்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி விட்டு சென்றது.
நான் லீனியர் கதையை அவ்வளவு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருந்தார் நித்திலன் சுவாமிநாதன். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையேயான தொடர்பை ஒரே காலத்தில் நிகழ்வது போலவே காட்டிவிட்டு, பிறகு, அதற்கான நேரம் வேறு என்பதை சஸ்பென்சாக கூறி நித்திலன் சுவாமிநாதன் அசத்தினார்.
திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம், ஓடிடி தளத்திலும் கவனம் பெற்றது. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு ஹிந்தி திரைஉலகிலும் இந்த திரைப்படத்தை கொண்டாடினார்கள். இப்படி பலதரப்பட்ட மொழிகளிலும் மகாராஜா வாகை சூடியதால் அந்த திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படியான சூழலில் சீன நாட்டிலும் மகாராஜா திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட அந்த நாட்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது மகாராஜா. இதற்கு முன்பு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான ரஜினியின் கபாலி, சிவகார்த்திகேயனின் கனா, விஜயின் மெர்சல் ஆகிய படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது மகாராஜா.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் மகாராஜா திரைப்படம் 190 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். தனது இயக்குனருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். முழுக்க முழுக்க திறமைக்கு கிடைத்த பரிசு இது என பலரும் இயக்குனரை வாழ்த்தி வருகின்றனர்.





