நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் 10 சதவீதம் மட்டுமே பாக்கி உள்ளது. ரஷ்யாவில் மீதி படப்பிடிப்பை இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்கும் நிலையில், அடுத்த மாதம் மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜயின் திடீர் அரசியல் பிரவேசம் பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது 25 ஆண்டுகளாக தமிழக மக்கள் ஆவலாக எதிர்பார்த்தது, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை தான். ஆனால் அவர் வரவில்லை. ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வந்து விடுவேன் என்றார். இப்போது ஆண்டவன் வேண்டாம் என்று சொன்னதால் வராமல் ஒதுங்கி விட்டார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில், கமல்ஹாசன் அரசியலில் குதித்தார்.
ஆனால் எம்ஜிஆர், விஜயகாந்துக்கு பிறகு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தும் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டனர் என்பதுதான் உண்மை. அந்த நிலையில்தான் இப்போது கமலும் இருக்கிறார். அவரது அரசியல் வருகை பெரிய அளவில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேர்தல் முடிவுகளிலும், பெற்ற ஓட்டுகளுமே மக்கள் நீதிமய்யத்தின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தி விட்டது.
நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக், மன்சூர் அலிகான், கருணாஸ், சரத்குமார், கமல்ஹாசன் இப்படி அரசியல் தலைவர்களாக பலர் இருந்தும், பெயர் கிடைத்தது எம்ஜிஆருக்கும், கேப்டன் விஜயகாந்துக்கும் தான். தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த், உடல் ஆரோக்கியம் மட்டும் சரியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பிறகு அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியை துவக்கியிருக்கிறார். வரும் நாட்களில் அவரது கட்சியின் கொடி, கொள்கைகள், மக்களுக்காக அவர் செய்யப் போகிற திட்டங்கள் போன்வற்றின் அடிப்படையில் அவரை முதலமைச்சராக மக்கள் வெற்றி பெறச் செய்வார்களா என்பதற்கு 2026 சட்டசபை தேர்தல் ஓட்டுக்கள்தான் பதில் சொல்லும். அதுவரை திமுக, அதிமுக போட்டி களத்தில் அவரும் ஒருவராக தேர்தல் குஸ்தியில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே இப்போது நடிகர் பிரசாந்த், அவரது அப்பா தியாகராஜன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை திடீரென சந்தித்துள்ளனர். பார்லிமென்ட் தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்று ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அந்தளவுக்கு எனக்கு தைரியமில்லை என பதிலளித்திருந்தார். இப்போது பிரசாந்த், தனது தந்தையுடன் முக்கிய அரசியல் கட்சி தலைவரை சந்தித்திருப்பது வைரலாகி வருகிறது.





