தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். ஜெண்டில் மேன் படம் துவங்கி இந்தியன் 2 படம் வரை பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி எந்திரன் 2.0 என 3 சூப்பர் ஹிட் படங்களை தந்தார். இந்தியன் படம் கமல் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்றது.
ஆனால் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. இது கமலுக்கும் ஷங்கருக்கும் மிகப்பெரிய வருத்தம் ஏமாற்றம் இருந்தாலும் அதற்கு இந்தியன் 3 படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்து ரசிகர்களை அசத்திவிட திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு மீதம் உள்ளது.
நண்பன் அந்நியன் ஐ முதல்வன் பாய்ஸ் ஜீன்ஸ் காதலன் என பல வெற்றிப் படங்களை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் உருவான படம் கேம் சேஞ்சர். நாளை 10ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. நேரடி தெலுங்கு படமான இதில் ராம்சரண் நாயகனாக 2 வேடங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கியாரா அத்வானி அஞ்சலி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார். இவர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர்.
கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரண் உள்ளிட்டோர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இதற்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம் நீங்கள் யாருடைய வாழ்க்கை கதையை படமாக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர், இல்லை, பயோபிக் எடுக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை. அப்படி எடுத்தால் ரஜினி சார் பயோபிக் தான் எடுக்கணும். நானே இதை சொல்வேன்னு எதிர்பார்க்கல, நீங்க கேட்டவுடன் டக் என தோணியது. ஒரு நிமிஷத்துக்கு முன்னால அந்த கேள்வியை கேட்டவுடன் தான் அந்த ஸ்பார்க்கே வந்தது. யாரை நடிக்க வைப்பது என்றால் என்ன சொல்வது, பார்க்கலாம் என்று இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





