தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறியவர் சத்யராஜ். நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தவர், 55 வயதுகளை கடந்த நிலையில், குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகன் என்பது தொழில். இதில் வில்லன் ஹீரோ காமெடி குணச்சித்திரம் என எதுவாக இருந்தாலும் நடிக்க வேண்டியதுதான் என்பதுதான் சத்யராஜின் பிளாஸபி.
ஆக்டோபஸ் போல, கிடைத்த வாய்ப்புகளை பற்றிக்கொண்டால்தான் சினிமாவில் நிலைத்திருக்க முடியும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியும் என்பதை அவரே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். பெரிய நடிகராக இருந்தாலும் பந்தா காட்டாத யதார்த்த மனிதராக இப்போது வரை சத்யராஜ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது அதிக பற்றுக்கொண்டவர் சத்யராஜ். சினிமாவில் எப்போதுமே தன் தலைவராக எம்ஜிஆரை தான் சொல்வார். ஆனால் நிஜத்தில் திமுகவின் மீது அதிக அபிமானம் கொண்டவராக இருக்கிறார். அதற்கு பகுத்தறிவு வழியில் பெரியார் வழி செல்வதால் திமுக அனுதாபியாக தன்னை வெளிப்படுத்துகிறார்.
அதே நேரத்தில், சில வாரங்களுக்கு முன் ஒரு நேர்காணலில், நடிகர் விஜயின் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, பெரியார்தான் அந்த கட்சியின் கொள்கை தலைவராக இருப்பதால், கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்தால் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவேன். நம்ம விஜய்தான், கேட்டால் கொடுத்து விடுவார் என்றும் கிண்டலாக கூறினார்.
சத்யராஜ் மனைவி மகேஸ்வரி சில ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். சத்யராஜ் மகேஸ்வரி தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகன் சிபிராஜ் நடிகராக உள்ளார். மகள் திவ்யா ஊட்டசத்து நிபுணராக உள்ளார். அடிக்கடி இணையத்தில் சமூகம், அரசியல் சார்ந்த கருத்துகளை, விமர்சனங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, திமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடிகர் சத்யராஜின் மகள், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார். கட்சி பொருளாளர் டி ஆர் பாலு முதன்மை செயலாளர் கே என் நேரு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





