சமீபத்தில் வெளியான படம் மதகஜ ராஜா, ரிலீஸான 12 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் உருவான இந்த படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகி உள்ளது. சில காரணங்களால் அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடித்த நிலையில், சுந்தர் சி விஷால் திருப்பூர் சுப்ரமணியம் எடுத்த தீவிர முயற்சியால் அந்த படம் வெளியானது.
மதகஜ ராஜாவை பொருத்த வரை, விக்ரம் நடித்த தூள் படத்தின் 2ம் பாகம் என்று தாராளமாக சொல்லலாம். அப்போது சந்தானம் காமெடியனாக இருந்த காலம் என்பதால் இந்த படத்திலும் அவரது சில டைமிங் காமெடி எடுபட்டிருக்கிறது. கவர்ச்சியில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் தாராளம் காட்டியிருக்கின்றனர். சுந்தர் சியின் வழக்கமான மசாலா கதைதான்.
ஆனால் மதகஜ ராஜாவின் வெற்றிக்கு காரணம் ரசிகர்கள் அல்ல, இப்படியாவது ஒரு ஜாலியான படம் பார்க்கலாமே என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு பழிவாங்கல் வன்முறை படங்கள், நசுக்கிட்டான், பிதுக்கிட்டான் என சமூக உரிமை பேசும் படங்களை தந்து அதை பார்த்து பார்த்து ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர்.
அதனால் சுமாராக இருந்தாலும் மதகஜ ராஜா சூப்பராக தோன்ற தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் குப்பைகளை படமாக்கும் இயக்குனர்கள்தான் காரணம். எனினும் தமிழ் சினிமா பெயரை காப்பாற்ற அவ்வப்போது லப்பர் பந்து சித்தா குட்நைட் காக்கா முட்டை போன்ற படங்களும் வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை.
இந்நிலையில் சமீப காலமாக மலையாள படங்களிலும் வன்முறை படங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான பணி என்ற படத்தில் ஜோஜூ ஜார்ஜ், நாடோடிகள் பட நடிகை அபிநயா, ஷீமா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் கற்பழிப்பு காட்சி, வன்முறை காட்சிகள் ரசிகர்களை பதற வைக்கிறது. கிஷ்கிந்தா காண்டம் படத்திலும் சில காட்சிகள் ரத்த காட்சிகளாக இருந்தன.
தமிழ் படங்கள், மலையாள படங்களை பார்த்து யதார்த்த கதைகளை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை மாறி, தமிழ் படங்களை பார்த்து, மலையாள இயக்குனர்கள் தங்களது படங்களை வன்முறை, கமர்ஷியல் படங்கள் என்ற பாதைக்கு மாறுகிறார்களோ என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. மலையாள படங்கள் அந்த கேரளத்துக்கு மணம் மாறாத படங்களையே தர வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.





