நடிகர் எம்எஸ் பாஸ்கர், இவருக்கு பட்டாபி என்றுதான் துவக்கத்தில் பெயர் இருந்தது. சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சின்னத்திரை தொடரில் நளினி, நிரோஷாவுடன் நடித்து பிரபலமானவர். அதில் காது கேளாதவராக பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அத்துடன் தமிழ் படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் எம்எஸ் பாஸ்கர் இருந்தார்.
ஒரு கட்டத்தில், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. முதலில் காமெடி ரோல்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்த எம்எஸ் பாஸ்கர் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், கேரக்டர் ரோல்களிலும் சில படங்களில் நடித்து அசத்தினார். தசாவதாரம் படத்தில், வில்லன் பிளட்ஜர் கமலுக்கு மொழி பெயர்ப்பாளராக எம்எஸ் பாஸ்கர் படம் முழுக்க நடித்திருப்பார்.
சிவகாசி, மொழி, 8 தோட்டாக்கள், திருப்பாச்சி, தமிழ் படம், எங்கள் அண்ணா, மாசி, டிமாண்டி காலனி, காற்றின் மொழி, தெய்வ திருமகள், சூது கவ்வும், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், பேரரசு, சமீபத்தில் வெளிவந்த பார்க்கிங் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் எம்எஸ் பாஸ்கர். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார்.
விஜயகாந்துடன் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்போது அவர் அருகில் கூப்பிட்டு அமர வைத்து என்னை சாப்பிடச் சொல்வார். மற்றவர்களின் இலையில் சாப்பாடு இல்லை என்றால் கவனித்து, உடனே அவர்களுக்கு சாப்பாடு பரிமாறச் சொல்வார். ரசிகர்கள், கட்சியினர், வீட்டில் இருந்து ஏகப்பட்ட உணவு வகைகள் வந்திருக்கும். எனக்கு நிறைய மட்டன், பெரிய கரண்டியில் அள்ளி அள்ளி வைத்து, சாப்பிடுங்க என உபசரிப்பார். நான் அதை எல்லாம் சாப்பிட்டு முடிக்கும்போது மயக்கமே வருவது போல இருக்கும்.
அதற்கு பிறகும் விடமாட்டார். பெரிய டம்ளரில் பாயாசத்தை கொடுப்பார். இதை குடித்தால் எனக்கு தூக்கமே வந்துவிடும் என்பேன். பரவாயில்லை குடிங்க என்பார். பிறகு, இயக்குநரை அழைத்து எம்எஸ் பாஸ்கர் தூங்கட்டும். அவரது காட்சிகளை மாலையில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் நடிக்கும் காட்சிகளை எடுங்கள் என்று கூறி விடுவார். இப்படி என் மீது அன்பை காட்டுவதில் ஒரு தாயை போல நடந்துக்கொண்டவர் விஜயகாந்த் என உருக்கமாக கூறியிருக்கிறார் எம்எஸ் பாஸ்கர்.
நடிகர் விஜயகாந்த் ஷூட்டிங்கில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள், படப்பிடிப்பு குழுவினர், தொழிலாளர்கள் என்ற பாகுபாடு இருக்காது. அனைவருக்குமே ஒரே விதமான அசைவ விருந்துதான் வழங்கப்படும். அதுபோல் தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீங்களா என்றுதான் விஜயகாந்த் முதலில் கேட்பது வழக்கம். அவரை காண அவரது வீட்டுக்கு செல்பவர்களை, சாப்பிடாமல் திரும்பிச் செல்ல விடமாட்டார். இந்த உயர்ந்த குணம் எம்ஜிஆரிடம் இருந்து அவர் கற்றுக்கொண்டது. அதனால்தான் அவரை இந்த விஷயத்தில் கருப்பு எம்ஜிஆர் என பலரும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





