வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை பாகம் 1” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிடவே இல்லை. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பே இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. எப்போதும் வெற்றிமாறன் முதலில் இத்தனை நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறிதான் நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்துப்போவார். ஆனால் அதன் பின் படப்பிடிப்பு நாட்களை இஷ்டம் போல் நீட்டிக்கொண்டே போவார். இதனால் நடிகர்கள் அவஸ்தைப்படுவது உண்டு என்றாலும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் கமுக்கமாக ஒத்துழைப்பார்கள்.

இவ்வாறுதான் “விடுதலை” படத்தின் நீளம் நீண்டுகொண்டே போனது. ஆதலால் இத்திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தனர். முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகளை படமாக்க வேண்டி இருந்ததால் மீண்டும் படக்குழுவினர் மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் வெறும் 30 நாட்களே படப்பிடிப்பு என்று சொல்லி நடிகர்களை அழைத்துப்போயிருக்கிறார். ஆனால் 15 நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டாராம். அதாவது இன்னும் 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டம் போட்டிருக்கிறாராம். ஆனால் அது 50 நாட்களாக இருக்குமா அல்லது 150 நாட்களாக ஆகுமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

“விடுதலை” இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை பார்க்கும்போது இந்த ஆண்டு வெளிவர நிச்சயம் வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. மீண்டும் வெற்றிமாறன் தனது கைவரிசையை காட்டிவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.





