இயக்குனர் ராமின் திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ என்றே கூறலாம். எதார்த்த வாழ்க்கையை பேசும் அவரது சினிமாவுக்கு இங்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர் மிக மிகக் குறைந்த திரைப்படங்களையே இயக்கியிருக்கிறார். இதில் ராமிற்கு முதல் திரைப்படமாக அமைந்தது கற்றது தமிழ்.
பெற்றோரை இழந்த ஒரு இளைஞன், தனது கல்லூரி வாழ்க்கையில் தமிழை பட்டப் படிப்பாக படிக்கும் போது என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறான், இந்த சமூகத்தால் எப்படி அவன் புறந்தள்ள படிக்கிறான், நிதி சுமையால் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பார் இயக்குனர் ராம்.
கற்றது தமிழ் திரைப்படம் அந்த சமயத்தில் வெளிவந்த போது பெரிய அளவு ஓடவில்லை. பிறகு விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் குறித்து பலரது பார்வையும் திரும்ப, கொண்டாடப்பட்டது ராமின் காவியம். இதனைத் தொடர்ந்து, தங்க மீன்கள் திரைப்படத்தை எடுத்திருந்தார். இதுவும், வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதேசமயம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.
இந்த வரிசையில் அவரது அடுத்த திரைப்படமாக அமைந்தது தரமணி. இந்த முறை தரமணி திரைப்படத்திற்கு வசூலும் ஓரளவு கிடைத்தது. அதற்கும் மேல் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இப்படி குறிப்பிட்டத்தக்க திரைப்படங்களை எடுத்து இருக்கும் ராமிற்கு அடுத்த திரைப்படமாக வந்திருக்கிறது பறந்து போ. இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கும் சூழலில், நல்ல விமர்சனத்தை சம்பாதித்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில், இயக்குனர் ராம் தனது திரைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது சிஷ்யனான மாரி செல்வராஜ் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதில், மாரி செல்வராஜின் வெற்றி எனது வெற்றி. சொல்லப்போனால் அது எங்கள் படக்குழுவின் வெற்றி. மேக்கிங் வகையில் பார்க்கும்போது பரியேறும் பெருமாள் விட எனக்கு வாழை பிடித்தது.
தற்போது பைசன் திரைப்படத்தை பார்க்கும்போது அதை வாழையை விட எனக்கு அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் மாரி செல்வராஜுக்கு இந்த வெற்றி போதாது. அவன் பான் இந்தியா திரைப்படம் எடுக்க வேண்டும். ஷாருக்கான் அமீர் கானை வைத்து அவன் படம் இயக்க வேண்டும். அப்போது ஷாருக்கான் உடன் நான் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.





