நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே சுவாரசியமான ஒரு மனிதராக தான் இருக்கிறார். அதை அவ்வப்போது அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் இயக்குனர்கள் சினிமா பிரபலங்கள் சொல்வது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக பிரமிப்பாக இருக்கிறது. இப்படி மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர் கமல்ஹாசன் போன்றவர்களிடமும் சுவாரசியமான அனுபவங்கள் பலருக்கும் இருந்திருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது 74 வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரது நடிப்பில் உருவான கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளிவர உள்ள இந்த படத்தில் உபேந்திரா நாகர்ஜூனா செளபிர் சாஹிர் அமீர்கான் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் சினிமா நண்பர்களில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மிகவும் நெருக்கமானவர். ரஜினிகாந்த் நடித்த முத்து படையப்பா லிங்கா போன்ற படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார். இதில் லிங்கா படம் மட்டுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. மற்ற 2 படங்களும் ரஜினிக்கு மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, பல ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது அவர் நடிக்கப் போகிற படத்தின் கதையை அவருக்கு மிகவும் நெருங்கிய வட்டத்தில் இருக்கிற இயக்குனர்களை அழைத்து அந்த கதையை அவரே அவர்களிடம் சொல்வார்.
ஒரு நாள் சுரேஷ் கிருஷ்ணா ஒரு நாள் பி வாசு அப்புறம் ஒரு நாள் ஆர்வி உதயகுமார் ஒரு நாள் என்னிடம் என்று இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு இயக்குனர்கிட்ட அவர் அந்த படத்தோட கதையை சொல்வார். அப்போது அந்த கதை அவருக்கே மறுபடி மறுபடி சொல்லி நல்லா மனசுல பதிஞ்சிடும்.
நாம சொல்ற கதையை டிஸ்கஷன் முடிஞ்சு 2 நாளைக்கு அப்புறம் நம்மகிட்டயே கூப்பிட்டு ரஜினி சொல்வார். கதை இப்படி ஆரம்பிக்குது, இப்படி பண்ணுது, இப்படி போகுது அப்படீன்னு அவரே கதை சொல்வார். அது அவருக்குள்ளே நல்லா பிராக்டீஸ் ஆயிடும் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அதுபோல் ரஜினிகாந்த், அவர் நடிக்கும் தனது படத்தின் கதைகளை மற்ற இயக்குனர்களிடம் சொல்வதாக தெரியவில்லை.





