கடந்த 2006ம் ஆண்டில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். தொடர்ந்து அங்காடித் தெரு ஆடுகளம் ஆயிரத்தில் ஒருவன் அமரன் எவனோ ஒருவன் கொம்பன் கிரீடம் சர்தார் பரதேசி மதராசபட்டணம் என பல வெற்றிப் படங்களுக்கு அவர் இசையமைத்து முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக மாறினார்.
ஒரு கட்டத்தில் அவர் திரைப்பட நடிகராகவும் மாறினார். டார்லிங் திரிஷா இல்லேனா நயன்தாரா பென்சில் ஜெயில் நாச்சியார் குப்பத்து ராஜா சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜீவி பிரகாஷ்குமார் தனது மனைவி சைந்தவியை சட்டப்படியான விவாகரத்து பெற்றார். நேற்று (30ம் தேதி) அவர்களுக்கு சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அவர்களது மகன் அன்வியை சைந்தவியே கவனித்து அவரது பராமரிப்பில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ஜீவி பிரகாஷ் நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் தந்துவிட்டார்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் வாத்தி. இந்த படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வாரம் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வாத்தி படத்தில் சிறந்த இசையமைத்ததற்காக 2வது முறையாக ஜீவி பிரகாஷ்குமார் தேசிய விருது பெற்றார். அதேபோல் நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்காக ஜீவி பிரகாஷ் குமார் முதல் முறையாகதேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூரரைப் போற்று மற்றும் வாத்தி படங்களுக்காக 2 முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஒரு விலை உயர்ந்த பரிசை கொடுத்துள்ளார். அதாவது ஏஆர் ரகுமான் தனது இசைக்கூடத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த வெள்ளை நிறம் கொண்ட பியானோவை ஜீவி பிரகாஷ் குமாருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த தகவலை குறிப்பிட்டு அந்த வெள்ளை நிற பியானோவை புகைப்படத்துடன் ஜீவி பிரகாஷ் குமார், தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஜீவி பிரகாஷ் குமாரின் சொந்த தாய்மாமன். ஏஆர் ரகுமானின் சகோதரி மகன்தான் ஜீவி பிரகாஷ் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது அக்கா மகனின் ஜீவி பிரகாஷின் வெற்றியால் மகிழ்ந்த ரகுமான் இந்த அன்பு பரிசை தாய்மாமனாக அளித்திருக்கிறார்.





