ஒரு நல்ல திரைப்படம் அதற்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வதுண்டு. எந்த ஒரு நல்ல படைப்புக்கும் இது பொருந்தும் வாசகம்தான். ஒரு படம் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் திரைக்கு வந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டால் மட்டும் போதும், அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படமாக மாறிவிடும்.
அதற்கு மிக சிறந்த உதாரணமாக சொல்ல வேண்டிய படம்தான் காந்தாரா. கடந்த 2022ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. படத்தின் நாயகன் நாயகி யாருமே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லை. பரிச்சயமே இல்லை.
ஆனால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்று மகிழ்ந்தனர். மற்ற மொழிகளிலும் அதே வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. குறிப்பாக அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரசிகர்கள் பார்த்து மெய்சிலிர்த்து போயினர். அதுபோன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு அபூர்வமாக இருந்தது.
காந்தாரா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது காந்தாரா சாப்டர் 1 என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரிஷப் ஷெட்டியே மீண்டும் நாயகனாக நடித்து இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது. காந்தாரா படத்தின் முந்தைய கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நான்கைந்து முன்னணி நட்சத்திர ஹீரோக்களை நடிக்க வைத்து பான் இந்தியா படம் என்று கூறி ஒரு மொக்கையான பில்டப் படத்தை எடுத்து விட்டால் போதும், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடும் இன்றைய டுபாக்கூர் இயக்குனர்களுக்கு ரிஷப் ஷெட்டி போன்ற சிறந்த படைப்பாளிகள், தங்களது படைப்பின் மூலம் உண்மையை உணர வைத்து பாடம் நடத்துகிறார்.
ஆனால் அவர்கள் எப்போதும் திருந்தப் போவதில்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை. அதே நேரத்தில் அந்த மொக்கை படங்களை புறம்தள்ளி விடும் தெளிவான ரசிகர்கள் காந்தாரா சாப்டர் 1 போன்ற படங்களை பார்ப்பது மட்டுமின்றி மற்றவர்களையும் போய் பாருங்க என்று படத்தை பிரமோட் செய்கின்றனர். அந்த வகையில் காந்தாரா சாப்டர் 1 படம் ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடுகிறது. கடந்த 3 நாட்களில் இந்த படம் ரூ. 160 கோடி வசூலை கடந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் 10 நாட்களுக்குள் ரூ. 1000 கோடி வசூலை மிக எளிதாக அள்ளிவிடும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.





