தமிழ் படங்கள் என்றாலே முதலில் படங்களின் தலைப்புகள்தான் மனதை கொள்ளை கொள்ளும். அப்படிதான் ஒரு காலத்தில் படத்தின் டைட்டில்கள் அற்புதமாக இருந்தன. உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன் அடிமைப்பெண் எங்க வீட்டுப்பிள்ளை அன்பே வா பாசமலர் தங்கப்பதக்கம் அலைகள் ஓய்வதில்லை நினைவே ஒரு சங்கீதம் கடலோர கவிதைகள் கிழக்கே போகும் ரயில் தூறல் நின்னு போச்சு அந்த 7 நாட்கள் என டைட்டிலே கவிதை பாடும்.
அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் படத்தின் நாயகனை மையப்படுத்திய கதைகளே அதிகமாக வந்ததால் பொல்லாதவன் மாவீரன் சகலகலா வல்லவன் முத்து பாட்ஷா வேலைக்காரன் படிக்காதவன் தெற்கத்தி கள்ளன் கேப்டன் பிரபாகரன் என பெயர்களே டைட்டில்களாக வைக்கப்பட்டன. இப்போதும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் டைட்டில்கள் கதாநாயகனின் பெயர்களாக தான் பெரும்பாலும் இருக்கின்றன.
இதற்கிடையே தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் வைப்பது ஒரு பேஃஷனாக மாறியது. எம்டன் மகன் ஜூட் பாஸ் என ஆங்கில டைட்டில் அதிகரித்ததால் இனி ஆங்கில தலைப்பு வைக்கும் படங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு தராது. தமிழில் தலைப்பு இருந்தால் மட்டுமே வரிவிலக்கு அளிக்கும் என்று ஒரு அறிவிப்பு வெளியானதால் வரிவிலக்கு கிடைக்காதே என்பதற்காகவே தமிழ் டைட்டில்களை தமிழ் சினிமாவில் வைத்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம் அமேசான் பிரைம் நெட்பிளிக்ஸ் ஜீ 5 ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள்தான். ஓடிடி நிறுவனங்களிடம் தமிழ் படங்கள் டிஜிட்டல் ரைட்ஸ் விற்க வேண்டும் என்றால் படத்துக்கு ஆங்கில தலைப்பு வையுங்கள் என்பதை ஒரு முக்கிய நிபந்தனையாக வைக்கின்றனர். ஏனெனில் தமிழ் படத்தை அவர்கள் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் வெளியீடு செய்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் மொழி வேறுபாடின்றி பார்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பொதுவான தலைப்பு வேண்டும் என்பதே வணிக ரீதியான ஓடிடி தளங்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் வணிகத்துக்காக தமிழ் படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைப்பது தமிழை புறக்கணிப்பதாக தமிழை அவமதிப்பதாக உள்ளது. இப்போது கூட அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்துக்கு ஆங்கில தலைப்பு வைத்துவிட்டு அதற்கான என்ஓசி வாங்க படக்குழு அலைந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அந்த ஆங்கில தலைப்பு ஏற்கனவே ஹாலிவுட் படத்துக்கு வைக்கப்பட்ட ஒன்றாக உள்ளதாம்.
கன்னடத்தில் வெளியான காந்தாரா, தெலுங்கில் வெளியான ஹரிஹர வீரமல்லு போன்ற படங்கள் ஓடிடியில் அதே பெயரில் வெளியாகும் போது தமிழில் உருவாகும் படங்களுக்கு மட்டும் ஏன் ஆங்கில தலைப்புகள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வடமாநில மக்கள் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் கடைகளில் நிறுவனங்களில் தமிழில் எழுதிய பெயர் பலகைகளை கழட்டி விட்டு இந்தி மற்றும் ஆங்கில பெயர் பலகைகளை மாற்றி வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் தமிழை அகற்றிவிட்டு ஆங்கில தலைப்புகளை வைக்கின்றனர். அதனால் தமிழ் இனி மெல்ல சாகும்… என்ற வலி நிறைந்த ஒரு கவிஞன் எழுதிய வரி தமிழ்நாட்டில் நிஜமாகி கொண்டிருக்கிறது.





