தமிழ் சினிமா உலகில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மிகப் பெரிய ஆளுமை படைத்த நிறுவனமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு அந்த நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை வாங்கி வெளியிட்டது. ஆதலால் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பாளர்களை மிரட்டுவதாக பல வதந்திகள் பரவின.

ஆனால் உதயநிதி ஸ்டாலினோ ஒரு பேட்டியில் இது பற்றி கூறும்போது, “நான் தயாரிப்பாளர்களை மிரட்டுவது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் என்னை தேடி வருகின்றனர்” என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கணக்கு வழக்குகளில் நியாயமாக நடந்துகொள்வதாக பல திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு, ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் தனது பெயர் வராதது போல் பார்த்துக்கொண்டார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முடிவுகளில் தலையிடப்போவதில்லை எனவும் ஒரு முறை கூறியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியது பின் வருமாறு,
“ரெட் ஜெயன்ட் குறித்து ஒரு தயாரிப்பாளர் தனது வருத்தத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ஒரு நியாயம் இருந்தது. அதாவது ‘உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கண்ணீர் விட்டது போல் கவலைப்பட்டார். ஆனால் அதே நேரம் திரையுலகில் பெரிய திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்ற பெயரில் சின்ன படங்களை அடித்து காலி செய்துகொண்டிருக்கிறார்களே, இது அவர்களுக்கு உரைக்கவில்லையா?’ என்று கேட்டார்” என பிஸ்மி கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான “மாவீரன்”, “ஜெயிலர்” ஆகிய திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





