தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தவர் எஸ்வி சேகர். கடந்த 1980 – 90களில் ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் நடிகர் விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
மேலும் நாடகப்பிரியா என்ற நாடக அமைப்பை ஆரம்பத்தில் இருந்தே நடத்தி வரும் எஸ்வி சேகர் பல ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் அதிமுக காங்கிரஸ் பாஜக கட்சிகளில் இருந்த அவர் கடந்த 4 ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லை.
எனினும் தொடர்ந்து அரசியல் சார்ந்த தனது விமர்சனங்களை அவர் செய்து வருகிறார். சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வான காமெடி நடிகர் எஸ்வி சேகர் சேலம் ஏற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் திமுக பல சாதனைகளை செய்துள்ளது .
மொத்தம் 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமம் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கூட திமுக ஓட்டு வாங்கவில்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைத்து மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். அரசியலில் புது பயணத்தை தொடங்கியுள்ள விஜய் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
வேறு எந்த ஆட்சியிலும் பிராமணர்களுக்கு அதிகாரம் வழங்கியது இல்லை. முதல்வர் விஜய் ஆட்சியில் 2 பிராமணர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியது மகிழ்ச்சி தருகிறது. தமிழகத்தின் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். அதில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கு அந்தணர் நலவாரியம் அமைத்து அவர்களுக்கு உரிய சலுகை கிடைக்க வழி செய்தால், மேலும் 10 லட்சம் ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கும்.
அண்ணாமலை கட்சி ஆரம்பிப்பது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றதாகும். இதனால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. நான் புத்திசாலி என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. நான் மட்டுமே புத்திசாலி என்று சொல்வது அழித்துவிடும். அண்ணாமலையின் பிறந்த நாளில் இதுதான் என்னுடைய அட்வைஸ் என்று நடிகர் எஸ்வி சேகர் அப்போது கூறியிருக்கிறார்.





