சென்சார் போர்டு தரப்பில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. முதலில் ஜனநாயகன் படத்துக்கும் 10ம் தேதி ரிலீஸ் ஆன பராசக்தி படத்துக்கும்தான் கடும் போட்டி இருக்கும் என பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போய்விட்டது.
ஆனால் ஜனநாயகன் படம் வராத போதிலும் பராசக்தி படத்துக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தரமான சம்பவமாக பராசக்தி இருக்கும் என்று தியேட்டர்களுக்கு ஆர்வமாக சென்ற ரசிகர்களுக்கு ப்ளு சட்டை மாறன் விமர்சனத்தின்படி சர்க்கரை பொங்கலில் ரசத்தை ஊற்றி தந்துவிட்டார் இயக்குனர் சுதா கொங்கரா என்பதுதான் கசப்பான உண்மை.
பராசக்தி படம் வெளியாகும் முன்பு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன். பராசக்தி ஜனநாயகன் படம் இரண்டுமே வெளியாகிறது. 9ம் தேதி ஜனநாயகனும் 10ம் தேதி பராசக்தியும் பார்த்து பொங்கலை கொண்டாடுங்கள். இது அண்ணன் தம்பி பொங்கல்தான் என்று கூறியிருந்தார். ஆனால் அண்ணன் விஜய் படம் வராத நிலையில் தம்பி நடித்த பராசக்தி படமும் சொதப்பி விட்டதால் இது அண்ணன் தம்பி பொங்கலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமையவில்லை என்பதே உண்மை.
அதே நேரத்தில் நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படமும் வெளியானது. இந்த படம் திரைக்கு வருமா வராதா என்ற நிலையில் கோர்ட் வழக்கில் சிக்கியிருந்தது. ஆனால் எப்படியோ பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு இந்த படம் தியேட்டர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள், வா வாத்தியார் படம் தியேட்டருக்கு வராமலேயே இருந்திருக்கலாம். திரும்பி போய்டு வாத்தியார் என்றுதான் கலாய்த்தனர்.
அந்தளவுக்கு வா வாத்தியார் படம் சொதப்பலாக இருந்ததால் ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். ஆன மொத்தம் அண்ணன் தம்பி பொங்கலும் இந்த முறை இல்லை. எம்ஜிஆரை மையப்படுத்திய வாத்தியார் படமும் இல்லை என ரசிகர்கள் விரக்தியடைந்த நிலையில் இப்போது ரசிகர்களுக்கு இந்த பொங்கல் டிடிடி படம் மூலம் ஜீவா பொங்கலாக உற்சாகத்தை தந்திருக்கிறது.
நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் பொங்கல் பண்டிகை தினமான தை பொங்கல் நாளில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் காமெடி களத்தில் ஜனரஞ்சகமாக இருப்பதால் படத்தை பார்த்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சத்தமே இல்லாமல் வந்து சம்பவம் செய்துவிட்டார் ஜீவா. இந்த 2026ம் ஆண்டின் முதல் வெற்றி படம் தமிழில் இதுதான் என்று ஜீவா பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.





