நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில், நன்றி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் ராமநாராயணன் தனது நன்றி படம் மூலம், கன்னட நடிகரான அர்ஜூனை தமிழில் கொண்டு வந்தார். முதல் படத்தில் வாய் பேசாத கேரக்டரில், உடற்பயிற்சி ஆர்வலர் போன்ற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் அர்ஜூன்.
தொடர்ந்து சங்கர் குரு, கலாட்டா கல்யாணம், படிச்ச புள்ள உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூனுக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்த படங்கள் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜெண்டில் மேன் மற்றும் முதல்வன் படங்கள்தான். அதன்பிறகு அர்ஜூன் முன்னணி நடிகரானார்.
அதிரடி சண்டை ஆக்ஷன் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்து, அசத்தியவர் அர்ஜூன் என்பதால் ஆக்சன் கிங் அர்ஜூன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சேவகன் என்ற படத்தை இயக்கினார். அதே போல் பிரதாப், ரோஜாவை கிள்ளாதே, கர்ணா உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.
சமீப காலமாக 60 வயது கடந்துள்ள நடிகர் அர்ஜூன், சில படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மங்காத்தா, லியோ படங்களில் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் சர்வைவர் என்ற சவால் நிகழ்ச்சியை அர்ஜூன் தொகுத்து வழங்கி இருந்தார்.
இப்போது விடாமுயற்சி படத்திலும் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஒரு சொந்த படத்தை இயக்கி, தயாரிக்கிறார். இதற்கிடையே அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் மிக கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடிகர் அர்ஜூன் டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக சீரியல் ஒன்றை தயாரிக்கவும் அர்ஜூன் ஆயத்தமாகி இருக்கிறார். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் சீரியல் பெயர், அதில் நடிக்கும் நடிகர், நடிகையர் விவரம் அறிவிக்கப்பட உள்ளது.





