தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டு வெளியான அவன் இவன் என்ற படத்தில் ஆர்யா விஷால் இருவரும் இணைந்து சகோதரர்களாக நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் ஜிஎம் குமார் ஆர்கே மது ஷாலினி ஜனனி ஐயர் மற்றும் அம்பிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் மாறுகண் தோற்றத்தில் நடிகர் விஷால் நடிப்பும் நடிகர் ஆர்யாவின் யதார்த்தமான காமெடி நடிப்பும் ரசிகர்களிடையே பெரிய பாராட்டைப் பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடிகர் சூர்யாவாகவே வந்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் ஆர்யா அவன் இவன் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது நடிகர் ஆர்யா கூறியதாவது, அவன் இவன் படப்பிடிப்பு நடந்த தொடக்க காலகட்டத்தில் எனக்கு வேறு சில படங்களில் நடிக்கும் கமிட்மெண்டுகள் இருந்தது. அதனால் விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்க இயக்குனர் பாலா முடிவு செய்து இருக்கிறார்.
அதன்படி 40 நாட்கள் வரை விஷால் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் நான் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபோது அங்கு விஷால் இல்லை. இதுகுறித்து இயக்குனர் பாலாவிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், இத்தனை நாட்கள் எடுத்த காட்சிகளில் விஷால் பார்ப்பதற்கு விஷால் போலவே இருக்கிறார். அவர் கதாபாத்திரமாக மாறவில்லை. அதனால் அவருடைய பல் மற்றும் கண் அமைப்பை மாற்றுவதற்காக சென்னைக்கு அவரை அனுப்பி உள்ளேன் என்று பாலா கூறினார்.
அப்படி என்றால் 40 நாட்கள் உழைப்பு மற்றும் விஷால் நடிப்பில் எடுக்கப்பட்ட புட்டேஜ் என்ன ஆனது என்று நான் அவரிடம் கேட்டபோது பாலா ஒரு புன்னகையுடன், அந்த காட்சிகளை முழுமையாக படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறினார். கதாபாத்திரத்தின் கச்சிதமான தன்மைக்காக 40 நாட்கள் விஷாலின் உழைப்பை பாலா வெட்டி தூக்கி எறிந்தது எனக்கு அதிர்ச்சியை தந்தது என்று ஆர்யா கூறியிருக்கிறார்.
மேலும் நான் கடவுள் படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா தனது அடுத்த படத்திற்கு 2 ஹீரோக்கள் கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளார். மற்றொரு நாயகனை தேடிக் கொண்டிருந்தபோது நடிகர் விஷாலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் ஆர்யா கலந்துக்கொண்டார். அப்போது இந்த கதையைப் பற்றி விஷாலிடம் பேச அவர் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். உடனடியாக இயக்குனர் பாலாவுக்கு போன் செய்து காமெடியாக, ஒருத்தன் வசமா சிக்கிட்டான் என்று கூறியதாகவும் அந்த பேட்டியில் நடிகர் ஆர்யா ஜாலியாக கூறியிருக்கிறார்.





