நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மட்டும் வல்லவர் அல்ல. சகல கலைகளிலும் அவர் வல்லவர் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். இயக்குனர் கதை வசனகர்த்தா பாடகர் தயாரிப்பாளர் நடனக் கலைஞர் கவிஞர் தொழில்நுட்ப கலைஞர் என சினிமாவின் சகல கலைகளையும் கற்றவர். சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்கா சென்று கற்றுக்கொண்டு திரும்பியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிம்பு வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் நாசர் அபிராமி திரிஷா மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது.
தமிழ் சினிமாவில் படம் வெளியான 4 வாரங்களில் அந்த படம் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. புதிய படங்கள் உருவானால் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட ஓடிடி தளங்களில் அந்த படங்களை டிஜிட்டல் ரைட்ஸ் விலைக்கு விற்பதில் கணிசமான லாபம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. அதே போல் சேட்டிலைட் உரிமமும் பெரிய வருவாயை கொடுக்கிறது.
அதனால் முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களை பெரிய விலை கொடுத்து டிஜிட்டல் உரிமம் பெறும் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் அந்த படங்களில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. அதே போல் ஓடிடி தளங்களில் டிஜிட்டல் ரைட்ஸ் விலை போகாத பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன.
இந்த சூழலில் புதிய ரிலீஸ் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அது நீண்ட நாட்களாக வெறும் பேச்சளவில்தான் இருந்து வருகிறது. இந்த சூழலில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசனே தனது தக்லைஃப் படம் மூலம் பதில் தந்திருக்கிறார்.
மும்பையில் நடந்த தக்லைஃப் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தக்லைஃப் படம் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகும். இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமான போக்கு என்று நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். தக்லைஃப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





