விஜய் டிவியில் இருந்து ரசிகர்களுக்கு அறிமுகமான சிலர் இன்று சினிமாவில் பெரிய நடிகர்களாக மாறி இருக்கின்றனர். குறிப்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன் சந்ததானம் ரோபோ சங்கர் லொள்ளு சபா சுவாமிநாதன் மாறன் மனோகர் டிடி ரம்யா ரக்ஷன் ஜாக்குலின் தீனா சரத் போன்றவர்கள் விஜய் டிவியில் இருந்து வந்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்கள்தான்.
இப்போது அதே வரிசையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் சினிமாவில் ஒரு முக்கிய இடத்துக்கு வந்திருப்பவர்தான் கேபிஒய் பாலா. இவர் நடிகராக மட்டுமின்றி சமூக சேவையாளராக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு தனது வருமானத்தில் பெரும்பகுதியை தந்து வருகிறார். இப்போது சினிமாவில் நாயகனாக நடிக்கிறார்.
இதுவரை பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் கேபிஒய் பாலா இப்போது ஹீரோவாக நடிக்கிறார். காந்தி கண்ணாடி என்ற படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரணம் படத்தை இயக்கிய ஷெரீப், காந்தி கண்ணாடி படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.
இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். வருகிற செப்டம்பர் 5ம் தேதி காந்தி கண்ணாடி படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே நாளில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படமும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காந்தி கண்ணாடி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கேபிஒய் பாலா கூறியதாவது, நான் பல படங்களில் காமெடியனாக நடித்தேன். அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறவில்லை. காந்தி கண்ணாடி படத்தில் இப்போது ஹீரோ ஆகிவிட்டேன். ஆனாலும் 50 ஹீரோயின்கள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள்.
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி படம் மோதுவது துணிச்சலான முடிவா என்று கேட்கிறீர்கள். மதராஸி படம் வெற்றி பெறும். அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள். எங்க படமும் வெற்றி அடையும். நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம். அவர் இருக்கும் உயரம் வேறு. நான் இருக்கும் இடம் வேறு. நான் எந்த அரசியல் தலைவர்களுக்கும் எதிராக செயல்படவில்லை. வறுமைக்கு எதிராக செயல்படுகிறேன் என்று நடிகர் கேபிஒய் பாலா கூறியிருக்கிறார்.





