சாதாரணமாக சின்ன வயதில் அறிந்தோ அறியாமலோ நாம் பழகி கொள்ளும் சில கெட்ட விஷயங்கள் பெரியவர்களான பிறகும் தொடர்ந்து விடுகின்றன. குறிப்பாக சிகரெட் புகையிலை வெற்றிலை பாக்கு மதுபானம் மூக்குப்பொடி என சில பழக்கங்கள் அப்படி தான் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து விடுகிறது.
அதிலும் குறிப்பாக பலருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் எப்படியும் டீன் ஏஜ் வயதில் ஏற்பட்டு விடுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்களோ அல்லது சக நண்பர்களோ உறவினர்களோ யாரேனும் மூலமாக இந்த பழக்கம் சிலருக்கு ஏற்பட்டு விடும். பிறகு நாளடைவில் சிகரெட் புகைக்காமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்கிற அளவுக்கு அந்த பழக்கம் அவர்களை பாதித்து விடும்.
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக நாகேஷ் ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் பலருக்கும் அந்த பழக்கம் உள்ளது. ஆனால் இதில் பலரும் ஒரு கட்டத்துக்கு பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். ஆனால் பலரால் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் உடல் நலம் பாதித்தாலும் தொடரவே செய்கின்றனர்.
இந்நிலையில் தனது சிகரெட் பழக்கம் குறித்து நடிகர் கிச்சா சுதீப் சமீபத்தில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். பாகுபலி புலி ஈ போன்ற பல படங்களில் கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியை போல கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கிச்சா சுதீப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் கூறியதாவது, ஒருமுறை ஷூட்டிங் போன போது சிகரெட் பாக்கெட்டை மறந்து வீட்டிலேயே விட்டு விட்டு போயிட்டேன். அங்க போனால் ஒரு கடையும் இல்லை. ஷூட்டில் ஸ்பாட்டில் இருந்த ஒருவரிடம் சிகரெட்டை வாங்கி புகைத்தேன். அது ரொம்பவும் தரம் இல்லாத ஒரு பிராண்ட். புகைப்பதே கஷ்டமாக இருந்தது. நான் எப்பவும் ஒரே பிராண்ட் சிகரெட் தான் பிடிப்பேன்.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்ததற்கு அப்புறம் அதைபற்றி யோசித்தேன். ஒரு பிராண்டுக்கு அடிமையாகலாம். அதுக்கும் கீழ போய் அந்த சிகரடெ்டை எப்படி நான் பிடிச்சேன்? அதுவும் கிடைக்கலைன்னா பீடி புகைத்து இருப்பேனா என்றும் யோசிச்சேன். பழக்கம் வேறு அடிக்ஷன் வேறு. எனக்கு அது அடிக்ஷனாக மாறிச்சுன்னு தோணியது. அன்று முதல் சிகரெட் புகைப்பதை விட்டேன். சினிமாவில் கூட சிகரெட் பிடிக்கிற சீன் வந்தால் புகையை உள்ளே இழுக்க மாட்டேன் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியிருக்கிறார்.





