நடிகர் மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் படத்தில், வீரபத்திரன் கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, காமெடியாக பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.
கடந்த 1990களில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜா கம்பீர ராஜ குலோத்துங்க காத்தவராய கிருஷ்ண காமராஜர் என்று தனது படத்துக்கு மிக நீளமான பெயர் வைத்து தயாரித்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். இப்போது அவரது தயாரிப்பில் சரக்கு என்ற படம் வெளியானது.
மன்சூர் அலிகான் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இப்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராாக மன்சூர் அலிகான் போட்டியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக, வேலூரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
வேலூர் தொகுதியில், கண்டிப்பாக நான் தான் ஜெயிப்பேன். மக்கள் எனக்கு அமோக ஆதரவு தந்து வருகிறார்கள். நிச்சயம் நான்தான் இந்த தொகுதியில் எம் பி ஆக வெற்றி பெறுவேன் என்று மக்கள் மத்தியில் பேசி மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று அவர் சந்தை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு பழங்கள் கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் வேண்டாம் என்று மறுத்த அவருக்கு, சிலர் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி அந்த ஜூசை கொடுத்துள்ளனர்..ஜூஸ் குடித்த சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்பு, அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூஸ் குடித்த பிறகு தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஒரு தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனால் அந்த ஜூஸில் விஷம் போன்ற ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





