நடிகர் நாகேஷ், தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞராய் ஒரு சரித்திரம் படைத்தவர். இன்று ரசிகர்கள் காமெடி நடிகர் வடிவேலுவை கொண்டாடுவது போல், அந்த காலகட்டத்தில் பலமடங்கு நாகேஷ் கொண்டாடப்பட்டவர். எம்ஜிஆர் சிவாஜி படங்களில் முக்கிய காமெடியனாக நாகேஷ் தான் இருந்தார்.
நடிகர் நாகேஷ் செயின் ஸ்மோக்கர், எந்நேரமும் சிகரட் புகைத்தபடியே இருப்பார். மதுபழக்கமும் அதிகமாக கொண்டவர். ஆனால் நடிப்பை பொருத்த வரை அவரது கலையார்வத்தை, அந்த தீய பழக்கங்கள் கெடுக்காதபடி பார்த்துக்கொண்டார். எம்ஜிஆர், சிவாஜிக்கு மிகவும் பிடித்தமானவர் நாகேஷ்.
கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா காலமானார். அவர் இறப்பதற்கு முன், ஒரு நேர்காணலில் நாகேஷ் வாழ்க்கையில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தை பதிவு செய்திருந்தார். உண்மையில் பலருக்கும் தெரியாத, நாகேஷ் வாழ்க்கையில் நடந்த திடுக்கிட வைக்கும் உண்மை சம்பவம் அது.
தில்லானா மோனாம்பாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வைத்தி கேரக்டரில் நாகேஷ் நடித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது, படத்தின் இயக்குநர் ஏபி நாகராஜனுக்கு போனில் ஒரு தகவல் வருகிறது. அதாவது நாகேஷின் மனைவி ரெஜினா, அவரது சொந்த தம்பி செல்வராஜை கொலை செய்துவிட்டார். அதற்கான அவரை போலீஸ் கைது செய்துவிட்டனர் என்பதுதான் அந்த தகவல். எப்போதும் குடித்துவிட்டு, போதையில் அவர் செய்யும் பிரச்னைகளால் நாகேஷ் உட்பட அவரது குடும்பமே நிம்மதியின்றி தவித்திருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நாகேஷிடம் இது தெரிவிக்கப்பட்டது. சிறிதுநேரம் மனம் உடைந்து போன நாகேஷ், தொழிலை முதலில் கவனிப்போம். அடுத்த காட்சிகளை படம்பிடியுங்கள் என இயக்குநரிடம் தெரிவித்து, அவர் நடிக்க வேண்டிய போர்ஷன்களை முடித்துவிட்டு, பிறகுதான் அங்கிருந்து சென்றிருக்கிறார் நாகேஷ்.
தனது மனைவி ரெஜினாவை, நாகேஷ் சிறையில் சென்று சந்தித்து இருக்கிறார். பலபேரை சந்தோஷமாக சிரிக்க வைக்கும் உங்களை, என் தம்பி நிம்மதியாக, சந்தோஷமாக வாழ விடவில்லை. உங்கள் மன உளைச்சலை, கஷ்டத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவனை கொலை செய்தேன். உங்கள் நிம்மதிதான் எனக்கு முக்கியம் என்று கூறி, நாகேஷை தேற்றி இருக்கிறார் அவர் என இந்த தகவலை நடிகர் மனோபாலா பகிர்ந்துள்ளார்.





