தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர் என பன்முக தன்மைகளுடன் வலம் வருபவர் ஆர் பார்த்திபன். இயக்குனர் கே பாக்யராஜிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் பிறகு, புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பே கே பாக்யராஜ் இயக்கத்தில் தாவணிக் கனவுகள் படத்தில் நடிகராக அறிமுகமாகி விட்டார்.
புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான பயணத்தை துவங்கிய பார்த்திபன் முதல் படத்திலேயே பெரிய வெற்றியை, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் நடித்த போது நாயகி சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டு புதிய பாதை படம் மூலம் தங்களது திருமண பாதையிலும் பயணித்தனர்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சீதா – பார்த்திபன் வாழ்க்கையிலும் சூறாவளி வீசியது. கருத்து வேறுபாடுகளால் வாழ்க்கை கசந்து போன நிலையில் பார்த்திபனை சீதா பிரிந்தார். 2 மகள்கள், ஒரு வளர்ப்பு மகன் என வளர்ந்த பிள்ளைகள் இருந்த நிலையில் பார்த்திபன் – சீதா பிரிவு தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது.
அதே போல் இப்போது ஏஆர் ரகுமான் – சாயிரா பானு பிரிவும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அடுத்த ஆண்டில் தங்களது 30வது திருமண ஆண்டை கொண்டாட வேண்டிய நிலையில், சாயிரா பானு தன் கணவர் ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பிரிவு; இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை படத்துக்காக நான் எழுதி, கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழி உள்ளதா என சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போல, ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று அந்த பதிவில் நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





