தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் பார்த்திபன். இவர் கவிஞரும் கூட. இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்தவர். தாவணிக் கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை, படத்தின் இயக்குனர் கே பாக்யராஜ் தனது சிஷ்யன் பார்த்திபனுக்கு வழங்கி அழகு பார்த்தார்.
தொடர்ந்து புதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பார்த்திபன், அந்த படத்தை அவரே டைரக்ட் செய்து இயக்குனராகவும் காலடி பதித்தார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பார்த்திபனுக்கு தேடி தந்தது. தொடர்ந்து நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் பார்த்திபன் வலம் வருகிறார்.
அவ்வப்போது அரசியல் சமூகம் சினிமா சார்ந்த தனது கருத்துகளை வெளிப்படையாக கூறி வரும் நடிகர் பார்த்திபன், சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய்க்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். அடிக்கடி விஜயின் அரசியல் வருகை குறித்து பார்த்திபன் பாராட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் ஒரு பதிவை வெளியிட்டார். அது இணையத்தில் வைரலானது. எனது அரசியல் அதிர்வலை குறித்து நாளை ( இன்று) 4.46 மணிக்கு அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். பலரும் ஒருவேளை தவெக கட்சியில் பார்த்திபன் இணையப் போகிறாரா அல்லது அவரே தனிக்கட்சி எதுவும் துவங்கப் போகிறாரா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இயக்குனர் பார்த்திபன் நேற்று அறிவித்தபடி இன்று மாலை அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் தனது புகைப்படத்துடன் ஒரு பதிவை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் நான்தான் சிஎம் என்று டைட்டில் வைத்திருக்கிறார். இந்த புதிய படத்தை அவரே கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறார். ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார்.
மேலும் அந்த பதிவில், பெரியோர்களே தாய்மார்களே வாக்காளப் பெருமக்களே ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சிஎம் நாற்காலியில் அமர்ந்த பிறகும் போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக்கூடாது என்பதுதான். போடுங்கம்மா ஓட்டு படகு சின்னத்தை பார்த்து, சிஎம் சிங்காரவேலன் எனும் நான் சோத்துக்கட்சி என்று அந்த பதிவில் பார்த்திபன் நக்கலாக கூறியிருக்கிறார்.





