தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 18 ஆண்டுகள் கோமாவில் இருந்த நாயகன் படும் அவஸ்தைகளே படத்தின் கதைக்களமாக இருந்தது.
கோமாளி படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் அவரே ஹீரோவாக நடித்து இயக்கிய படம்தான் லவ் டுடே. இதில் இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளம் காதலர்களிடையே மொபைல் போன் பரிமாற்றம் நடந்தால் என்னாகும் என்பதை காதல் கலந்து சொன்ன படம்தான் லவ் டுடே.
இந்த படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு வெற்றிப் படமாக பிரதீப் ரங்கநாதனுக்கு அமைந்தது. அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் அதன்பிறகு டியூட் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்த நிலையில் அந்த படங்களும் தொடர் வெற்றிப் படங்களாக இருந்தன.
ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எல்ஐகே படம் கடந்த ஓராண்டாகியும் இன்னும் திரைக்கு வராமல் தாமதம் நீடிக்கிறது. இந்த படம் எப்படியும் காதலர் தினமான இன்று வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திரைக்கு வரவில்லை. வருகிற மார்ச் 27ம் தேதி திரைக்கு வந்துவிடும் என்றும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதுவும் நடந்தால்தான் நிஜம்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, என்னோட வாழ்க்கையில நான் கத்துக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான். நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாமல் கேட்கணும்.
அப்படி கூச்சப்படாமல் கேட்டு நோ அப்படீன்னு பதில் வந்தால் எதுவும் ஆகப்போறது இல்லே. ஆனா நாம கேட்டு அது நடக்கிறதுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு. அதுதான் நமக்கு முக்கியம். அதனால் எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேளுங்க. முடிவை பத்தி முன்பே யோசிக்காதீங்க என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது ரசிகர்களுக்கு அறிவுரையாக கூறியிருக்கிறார்.





