தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா விக்ரம் ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர். பல படங்களில் வில்லனாகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்.
செல்போன்களில் செயலிகள் மூலம் சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதில் பலரும் ஈடுபடுகின்றனர். இத்தகைய செயலி சூதாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சரத்குமார் பிரகாஷ் ராஜ் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக வழிநடத்தியதற்காக நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் புனித்ரா சர்மா என்பவர் புகார் எழுப்பினார். நடிகர்கள் நடித்த விளம்பரத்தை பார்த்து நம்பி மக்கள் பலர் கஷ்டப்பட்டு அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இந்த சூதாட்டத்தில் இழந்து விடுகிறார்கள்.
வேறு வழி தெரியாமல் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அவர்கள் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் நிலைக்கும் சென்று விடுகிறார்கள். எனவே சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா ராணா டகுபதி பிரகாஷ்ராஜ் நடிகை மஞ்சு லட்சுமி நிதி அகர்வால் வர்ஷினி சௌந்தர்யா உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பெட்டின் விளம்பரத்தில் நடித்தேன். அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இதற்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். கடந்த 2016ம் ஆண்டு இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால் நடித்தேன். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். ஒப்பந்தம் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெரியாமல் செய்த தவறுக்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இளைஞர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.





