கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகர்கள் சரத்குமார் ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்ற நாடகம் நடத்தப்பட்டது. அந்த விழாவில் மனோரமா எம்என் ராஜம் விஜயகுமார் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, வழக்கமாக எல்லா விழாக்களுக்கும் நான் சரியான நேரத்துக்கு போய் விடுவேன். ஆனால் இந்த விழாவுக்கு வேண்டும் என்றே கொஞ்சம் தாமதமாக தான் வந்தேன். ஏனென்றால் இது குடும்ப விழா. அதனால் சரியான நேரத்துக்கு வந்தாக வேண்டுமே என்ற கட்டாயம் இல்லை என்று நினைத்தேன்.
இதே நடிகர் சங்கத்தில் கடந்த 1979ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒரு விழா நடந்த போது ஸ்கூட்டரில் நான் வந்தேன். அப்போது உள்ளே என்னை விட மறுத்துவிட்டார்கள். பிறகு சிலர் வந்து என்னை உள்ளே வந்து அழைத்து வந்தார்கள். இவர்தான் ரஜினி என்று சொன்னார்கள். அப்போது உட்கார கூட இடமில்லை. நான் ஒரு ஓரமாக நின்று நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து விட்டுச் சென்றேன்.
நடிகர் சங்கத்தை சேர்ந்த கலைஞர்கள் வறுமையால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மைதான். அவர்களுக்கு நடிக்க தெரியும். ஆனால் சம்பாதிக்க தெரியாது என்பது வேதனையான விஷயம்தான். அதே நேரத்தில் என்னால் ஆன உதவிகளை நடிகர் சங்கத்துக்கு செய்ய எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.
இந்த நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக பாடுபட்ட விஜயகாந்தை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. பல கிரவுண்ட் நிலம் உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் தங்க தட்டில் வைத்து தேங்காய் வியாபாரம் செய்தது போல ஆகிவிடும்.
இப்போது உங்க ( திமுக) ஆட்சி நடக்கிறது. ராதாரவி வாகை சந்திரசேகர் சரத்குமார் போன்றவர்கள் கலைஞரை சந்தித்து கேட்டால் எல்லாவிதமான உதவிகளும் கிடைக்கும். ஆச்சி மனோரமா கேட்டால் கலைஞர் மறுத்து விடுவாரா? அப்படி மறுத்தாலும் ஆச்சி விட்டு விடுவாரா? எனவே இங்கு பல வசதிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டி அதில் நாடகங்கள் நடத்தினால் பல விதங்களில் வருமானம் கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் அப்போது பேசியிருக்கிறார்.





