ஆரம்பத்தில் நடிகர் பாண்டியராஜன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்தவர் ரமேஷ் கண்ணா. பிறகு இயக்குனர்கள் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய படங்களிலும் துணை இயக்குனராக இணை இயக்குனராக ரமேஷ் கண்ணா பணி புரிந்திருக்கிறார். தொடரும் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். பல படங்களில் ரமேஷ் கண்ணா காமெடி மறறும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் இயக்குனர் கதாசிரியர் திரைக்கதை ஆசிரியர் என பல பரிமானங்களைக் கொண்டவர் ரமேஷ் கண்ணா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ரமேஷ் கண்ணா மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அவரது மனைவி ஜானகி குறித்த பல குடும்ப தகவல்களை கூறியிருக்கிறார். அவரது கூறிய இந்த விஷயங்கள் சினிமா ரசிகர்கள் குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேர்காணலில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, ஜானகியின் சகோதரி மகனை தான் எனது தங்கை திருமணம் செய்துள்ளார். அதற்கு முன்னதாகவே ஜானகி எங்களுக்கு உறவுக்காரர் தான். ஜானகி எனது அப்பாவின் அக்காவின் மகள். அதாவது எனக்கு அத்தை பெண். எனக்கு முறைப்பெண்தான். நானும் எம்ஜிஆரும் சகலை. நான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரொம்பவும் வயது வித்யாசம் உண்டு.
அப்போதே எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்தது. எம்.ஜி.ஆர் ஜானகியை திருமணம் செய்ய என்னுடைய அப்பா சம்மதிக்கவில்லை. அவர்கள் திருமணத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்று அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக்கூடாது என்று உத்தரவு பெற்றவர்.
அதற்கு பின்னால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது 1962க்கு பிறகு தான். என்னுடைய அப்பா தான் ஜானகியை கும்பகோணத்தில் இருந்து, ஜானகியின் 13 வயதில் அவரை அழைத்து வந்தார். ஜானகிக்கு நடனம் சொல்லிக் கொடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிகையாக மாற்றியது எல்லாமே எனது அப்பா தான். எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் புத்தகம் படித்தால் அதில் அவர் எனது அப்பா குறித்து எழுதி இருப்பார்.
அந்த புத்தகத்தில் கார்டியன் கார்டியன் என்று எம்ஜிஆர் குறிப்பிட்டு எழுதி இருப்பது எல்லாம் எனது அப்பாவை தான். எனது அப்பாவிடம் எம்ஜிஆர் பெண் கேட்டு வரும்போது அப்பா கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு பேசினார். அப்பாவுக்கு பின்னால் இருந்த ஜானகி சண்டை போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதில் எம்ஜிஆர் குறிப்பிட்டு இருப்பார் என்று ரமேஷ் கண்ணா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





