கண்ணப்பா படம் இந்த வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் கண்ணப்பா படத்தில் கண்ணப்பா நாயனாரின் தந்தையாக நடிகர் சரத்குமார் படத்தில் நடித்திருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும் சரத்குமார் இருக்கிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, சிவ பக்தர்களில் சிறந்த பக்தரான 63 நாயன்மார்களில் ஒருவர்தான் கண்ணப்பா.
நாத்திகரான கண்ணப்பா எப்படி சிவ பக்தனாக மாறினார் என்பதுதான் இந்த படத்தின் கதை. நியூசிலாந்தில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அது மிகவும் சவாலானது. அந்த காலம் மாதிரியான பின்னணி தேவை என்பதால் அங்கே சென்றோம். இயக்குனர் முகேஷ் குமார் சிங்கின் இயக்கத்தில் இந்த படத்தில் நான் நடித்தது சிறப்பாகவும் இருந்தது.
கண்ணப்பா படத்தின் கடைசி ஒரு மணி நேரம் சுவாரசியமாக உள்ளதாக படம் பார்த்துகள் கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சிறந்த கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். சரித்திரங்களை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை உள்ளது.
நாம் நெருக்கடி நேரத்தில் நிச்சயம் கடவுளை தேடுவோம். அந்த பக்தியை பற்றி படத்தில் அழகாக கூறியிருக்கிறார்கள். கடவுள் யாராக இருந்தாலும் அவர் இருக்கிறார் என்பதை உணர வைக்கும் விதமாக கண்ணப்பா படம் உருவாகியுள்ளது. பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படமாக கண்ணப்பா இருக்கும்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படத்துக்கு எதிர்மறையான விமர்சனத்தை கொடுத்து விடாதீர்கள். விமர்சனங்களை அவரவர் பார்வையில் விட்டு விடுங்கள். கடுமையான முயற்சிக்கும் உழைப்புக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். மதுரை முருகன் மாநாட்டுக்கு எனக்கு விஐபி அழைப்பு வந்தது. ஆனால் நான் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அங்கே செல்ல முடியவில்லை. அதில் அரசியல் இல்லை.
நம் இளைஞர்களுக்கு சாமி கும்பிடுங்க என பக்தியை சொல்லிக் கொடுப்பதில் என்ன தவறு? நான் கடவுள் பக்தி உள்ளவன். இதோ கழுத்தில் கடவுள் டாலர் போட்டு இருக்கிறேன். எப்போதும் கடவுள் என்னுடன் தான் இருக்கிறார். அடுத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை படமாக்க கண்ணப்பா படத்தின் இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார் என்று நடிகர் சரத்குமார் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





