பாலிவுட் நடிகர் சோனு சூட் பிரபலமான நடிகராக இந்தியில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் வாய் பேசாத ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் ஒஸ்தி படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்திருந்தார். தேவி, அருந்ததி உள்ளிட்ட பல படங்களிலும் அவரது வில்லன் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
இந்தி தமிழ் தெலுங்கில் என பல மொழி படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வரும் நடிகர் சோனு சூட் உண்மையில் ஒரு ஹீரோவுக்குரிய குணங்களுடன் இருப்பவர். கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் அவர் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு பெரிய உதவிகளை செய்தவர். எப்போதும் எளிய மனிதர்களுக்கு உதவி செய்வது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் அவர் மக்களுக்கு உதவும் தாராள குணம் கொண்ட நாயகனாக பாராட்டப்பட்டு வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா படத்தில் வில்லனாக நடித்தார் சோனு சூட். இந்த படத்தில் நாயகனாக விஷால் நடித்த நிலையில் இரட்டை நாயகிகளாக வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். காமெடி ரோலில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் நிதின் சத்யா சடகோபன் ரமேஷ் மணிவண்ணன் மனோபாலா சிட்டிபாபு சுவாமிநாதன் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் 2103ம் ஆண்டில் ரிலீஸாக வேண்டிய நிலையில், நிதி பிரச்னை காரணமாக 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மதகஜ ராஜா படத்தில் நடித்தது குறித்து நடிகர் சோனு சூட் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் மதகஜ ராஜா படத்தில் நடித்ததையே மறந்து விட்டேன். சமீபத்தில் அந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று, பிரமாண்ட வெற்றியை அடைந்திருக்கிறது.
இது எல்லாம் தமிழ் சினிமாவில், கோலிவுட்டில் மட்டும்தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். படத்தில் நான் சீரியஸாக நடித்ததை எல்லாம், மனோபாலா நடித்த அந்த காட்சிகளில் காமெடியாக மாற்றி இயக்குனர் சுந்தர் சி அசத்தி விட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி என்று நடிகர் சோனு சூட் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





