நகைச்சுவை நடிகராக இருந்த சூரியின் திரையுலக வாழ்வை திருப்பி போட்ட திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், குமரேசன் காவலர் கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் சூரி. நம்ம சூரியா இப்படி என படத்தைப் பார்த்த அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளினர்.
தனது உடல் மொழியாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும் படம் முழுக்க சூரி நடித்திருக்கிறார் என்பதையே மறந்து குமரேசனாக தன்னை நிலை நிறுத்தி கொண்ட ரசிகரை பலரும் பாராட்டினர். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் பிஸியாகி இருக்கிறார் சூரி.
இதில் ஒன்றாக தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சமீபத்தில் ரோட்டார் டாமில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கருடன் என்னும் படத்தில் சூரி நடித்து வருகிறார். எதிர்நீச்சல் கொடி உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் கதையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரை விட, படத்தில் சூரிக்கு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசரில், சூரியின் கதாபாத்திரம் எந்த மாதிரியாக இருக்கும் என்று காட்டப்பட்டது. அதில் மிகுந்த விசுவாசியாக சூரி நடித்திருப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வினோத்குமார் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும் சூரி நடித்து வருகிறார்.
கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய வினோத் ராஜ் இதனை எடுத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வானது. தற்போது இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூரிக்கு இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறாராம். படத்தை பார்க்கும் நமக்கே அவர் மீது கடும் வெறுப்பு வரும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





