தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் நடிகர் சூரி. பிறகு வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று முன்னணி காமெடி நடிகராக சூரி மாறினார்.
அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக சூரி அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் நடித்த நடிகர் சூரி, தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்தார். இதில் கருடன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தற்போது விலங்கு வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மே மாதம் 16ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணிசெய்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சூரியுடன் சத்யராஜ் மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை தயாரிப்பாளர் எல்ரட் குமாரின் ஆர் எஸ் இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மண்டாடி என்றால் கடல் நீர்வரத்து போக்கு குறித்து ஆழ்ந்த அறிவு கொண்டவர். கடலுக்குள் நீரோட்டத்தை வைத்து மீன் பிடிக்கும் யுத்தியை அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மண்டாடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது இந்த விழாவில் நடிகர் சூரி பேசியதாவது, இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் இல்லையென்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. விடுதலை படத்துக்கு முன் எனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அது சுசீந்திரன் மூலமாக தான் நடந்தது. அதன் பிறகு என்னை ஒரு ஹீரோவாக நடிக்க வைத்தது வெற்றிமாறன்தான்.
இப்போது இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான். எதுவுமே இல்லாமல் தான் வந்தேன். ஆனால் இப்போது என் தகுதிக்கு மீறி நிறைய சம்பாதித்து விட்டேன். இது போதும். இனிமேல் சினிமாவில் நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை திருப்தி செய்தால் போதும். நல்ல படங்களில் நான் இருந்தால் போதும் என்று நடிகர் சூரி உருக்கமாக பேசியிருக்கிறார்.





