நடிகர் சூர்யா தமிழில் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். இப்போது அவரது நடிப்பில் உருவான கருப்பு படம் வருகிற 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். இந்தி சினிமாவில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அதனால் தமிழில் நடிப்பது மட்டுமின்றி இந்தியிலும் நடிக்க நடிகர் சூர்யா மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
ஏனெனில் இந்தி சினிமாவில் நடித்து பிரபலமானால் இந்திய அளவில் நட்சத்திர நடிகராக ரசிகர்களின் கவனத்தை பெறலாம். மேலும் பான் இந்தியா படங்களில் அதிகமாக நடிக்கும் வாய்ப்பும் உருவாகும். இந்தியில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டிய நிலையில் கடந்த 2024ம் ஆண்டில் அதற்கான ஒரு சூழல் உருவானது.
பாலிவுட்டில் பிரபலமான முன்னணி இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க கமிட் செய்யப்பட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜானகி கபூர் நடிப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது.
அப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இந்த படம் மிக மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதன்பிறகுதான் இந்தியில் கர்ணா பட வாய்ப்பை நடிகர் சூர்யா இழந்ததாகவும் ஒரு தகவல் வேகமாக பரவியது. கர்ணா படம் கைவிடப்பட்டதாக பரவிய தகவல் சூர்யா ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
சமீபத்தில் கர்ணா படம் குறித்து பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். கர்ணா படம் குறித்து ராகேஷ் ஓம்பிரகாஷ் கூறியதாவது, கர்ணா படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டேன். 2 பாகங்களாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணி முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட கர்ணா படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் சில காரணங்களால் இந்த படத்தை தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் கர்ணா படத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த படத்துக்காக ஏற்கனவே ஏஆர் ரகுமான் 6 பாடல்களை இசையமைத்து வைத்துள்ளார் என்று இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் நம்பிக்கையாக கூறியிருக்கிறார்.





