நடிகர் விஜய் 1990களில் நடிக்க வந்தவர். இயக்குநர் மற்றும் விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு அவரது முதல் படம். ஆனால் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. தொடர்ந்தும் சில படங்களில் அவரது நடிப்பை ரசிகர்கள் பெரியதாக கவனிக்கவில்லை. கேப்டன் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
அதன்பிறகு பல காதல் படங்களில் நடித்தார். துள்ளாத மனமும் துள்ளும். பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்களால் இளம் வயதினர் மனதை கவர்ந்தார். அடுத்து திருமலை, கில்லி, போக்கிரி, துப்பாக்கி போன்ற படங்களால் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். இப்போது ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 ஹீரோவாக, தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு இருக்கிறார்.
இந்நிலையில் விஜய் நடித்த படங்களில் அவருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா தான். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய 5 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் கில்லி மாஸ் ஹிட் படமாக விஜய் – திரிஷாவுக்கு அமைந்தது. ஆதி, குருவி 2 படங்களும் பிளாப் ஆகின. திருப்பாச்சி படம் வெற்றி பெற்றது. லியோ, விமர்சன ரீதியாக தோற்றாலும், வசூலில் சாதனை படைத்தது.
விஜய், திரிஷா இடையே நல்ல நட்பு உள்ள நிலையில், திரிஷாவுடன் லியோ படத்தில் நடிப்பது குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியது விமர்சனத்தில் சிக்கியது. திரிஷா குறித்து தவறாக பேசியதாக மன்சூர் அலிகானை பலரும் கண்டித்தனர். ஆனால் படத்தின் நாயகன் விஜய், இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவரது தரப்பில் இருந்து எந்த ஒரு கண்டனமும் வரவில்லை.
இப்போது அதிமுக பிரமுகர், திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு சேரன், விஷால் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சினிமாத்துறையில் உள்ள விஜய், ஒரு நடிகராக இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. திரிஷா தன்னுடன் 5 படங்களில் நடித்தவர் என்ற ஒரு நிலைப்பாட்டில், விஜய் எந்த கருத்தையும் சொல்ல முன்வராமல் இருப்பது, ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
வழக்கமாகவே விஜய், படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் அதிகமாக பேச மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் கேரவனுக்குள் சென்றுவிடுவார். ஷாட் ரெடியானதும் வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவனுக்குள் சென்று விடுவார். சினிமா நடிகராக இப்படி அவர் இருந்தாலும், இப்போது ஒரு அரசியல் கட்சி தலைவரான பிறகும், எந்த பிரச்னைக்கும் வாய் திறக்காமல் இருந்தால், மக்கள் பிரச்னைகளுக்கு இவர் எப்படி கேள்வி எழுப்புவார், மக்களுக்காக எப்படி குரல் கொடுப்பார் என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.





