தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய நடிகர்கள், அரசியல்வாதிகளாகி மக்கள் காப்பாற்ற மிக ஆர்வமாக இருக்கின்றனர். கொஞ்சம் ஆழமாக சொன்னால், துடியாக துடிக்கிறார்கள். குறிப்பாக தளபதி விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால், அவரது படத்தை போலவே, அதிரடியாக ஆட்சி நடத்தி உலகத்துக்கே உதாரணமாக தமிழகத்தை மாற்றிக் காட்டி விடுவார் என்கின்றனர்.
ஆனால், சமீபத்தில்தான் விஜய் ரசிகர்கள், லியோ டிரெய்லர் திரையிட்ட கோயம்பேடு, ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கி, தங்களது வெறியாட்டத்தை காட்டினர். நாளை அரசியலுக்கு வந்தால், விஜய் மட்டுமல்ல, அவரது ரசிகர்கள்தான் கட்சிகளின் நிர்வாகிகளாக இருப்பர். அவர்கள் அமைச்சர், எம்எல்ஏ ஆகிவிட்டால், ரோகிணி தியேட்டர் போலவே, தமிழ்நாடும் எடுத்துக்காட்டாக இருக்கும்.
ரசிகர்கள் மத்தியில் இருவரும் புகழ் பெற்றிருந்தாலும் எம்ஜிஆரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட மக்கள், சிவாஜியை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் படங்களை விரும்பி பார்க்கும் பல ரசிகர்கள், அவரது நடிப்பை தான் விரும்புகின்றனரே தவிர, அவரது அரசியலை அல்ல. மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சி தலைவராக பெரிய வெற்றியை அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
உண்மையில், மக்கள் மீது உண்மையாக அக்கறை கொண்ட அரசியல் தலைவராக உருவெடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். ஆனால், மதுப்பழகத்தால் அவர் தன்னைத்தானே கெடுத்துக்கொண்டு, தமிழகத்தை ஆளுகிற வாய்ப்பையும் இழந்துவிட்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை. பிரமேலதா, சுதீஷ் கையில் சிக்கி தேமுதிக கரைந்து போய்விட்டது. விஜயகாந்த் மீது இருந்த நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிட்டனர்.
இந்த நிலையில் கமல், சரத்குமார், விஜய், குஷ்பு என எத்தனை பேர் தமிழக அரசியலில் இருந்தாலும், அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவது இல்லை. ஏனெனில், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பற்ற நலிந்த நிலையில் எத்தனையோ நடிகர்கள் இருந்தும், அவர்களை கைதூக்கி விட எந்த நடிகரும் முயற்சிக்கவில்லை. சிறுநீரகம் பாதிப்பு, உடல்நலக்கோளாறுகளால் சில வசதியற்ற நடிகர்கள் இறக்கும் நிலையிலும் கூட இந்த வசதியான நடிகர்கள் அவர்களுக்கு உதவவில்லை.
மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்டி அதை பல சினிமா நிகழ்வுகளுக்கு, இதர கூட்டங்களுக்கு வாடகைக்கு விட்டால், மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். அதற்காக சில நடிகர்கள் தங்கள் சொந்த பணத்தில், கோடிக்கணக்கில் சில லட்சங்களை ஒதுக்கினால் கூட போதும். ஆனால், தங்களது பணத்தை பத்திரப்படுத்திக்கொண்டு இன்னும் கலைநிகழ்ச்சிகளை நடத்தவும், ரசிகர்களிடம் நிதி வசூலிக்கவுமே நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிடுகின்றனர். தான் சார்ந்திருக்கும் கலைத் துறையையே கண்டுக்கொள்ளாத இவர்கள், அரசியலுக்கு வந்து என்ன சாதிக்க போகிறார்கள் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக நிற்கிறது.





