மலையாள நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பகட்டத்தில் மலையாளத்தில் சிறு சிறு படங்களை நடித்து வந்த அவருக்கு தமிழில் கதாநாயகியாகும் வாய்ப்பு இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. விக்ரம் பிரபு உடன் ஜோடியாக அவர் நடித்திருந்த இந்த திரைப்படம், இங்கு ரிலீசானது கூட பாதி பேருக்கு தெரியாது.
இப்படியான சூழல்தான் 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றன. ரஜினி முருகன் மற்றும் ரெமோ என இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக, கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து விஜயுடன் இணைந்து அவர் பைரவா படத்தில் நடித்து முக்கிய நாயகி என்னும் அந்தஸ்தை பெற்றார். இதன்பிறகு கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இந்த சமயத்தில் அவரை ஏராளமானோர் கிண்டல் அடிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக அவரது சிரிப்பை வைத்து இங்கு பலர் ட்ரோல் செய்து வந்தனர்.
சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் போது அவ்வளவு கேலி கிண்டலுக்கு ஆளானார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இதையெல்லாம் நடிகை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. தொடர்ந்து தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.
இதன்பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். ஆனால் தனிப்பட்ட ரீதியாக அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது, சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்னும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்க அந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
மொழியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தையே பெற்றுள்ளது. இப்படியான சூழலில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனக்கு இயக்கத்தின் மேல் விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கிடைக்கும் நேரங்களில் அவ்வபோது கதை எழுதி வருவதாக தெரிவித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ், இயக்குனருக்கான தொழில்நுட்ப விஷயங்களை அதிகம் கற்க வேண்டி இருப்பதாக கூறி இருக்கிறார். எதிர்காலத்தில் சூர்யாவை வைத்து படம் இயக்க தனக்கு ஆசையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் என்னும் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.





