தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. நிறைய வெற்றிப் படங்களில் நடித்த அவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இப்போது சினேகாலயா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடையை சென்னையில் சினேகா, தன் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்ற ஒரு ரேம்ப் வாக் நிகழ்ச்சியை சமீபத்தில் சினேகா, பிரசன்னா நடத்தினர். தங்களது சினேகாலயா நிறுவனத்தின் விளம்பரத்துக்காக இப்படி ஒரு வித்யாசமான நிகழ்ச்சியை அவர்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் பேசினர்.
அப்போது நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் கூறியதாவது. கடைசியாக நான் தமிழில் பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தேன். நல்ல படம் கிடைத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன். ஆனால் இப்போதைக்கு சினேகாலயா பிசினஸில் பிஸியாக இருக்கிறேன்.
கர்நாடக இசை கலைஞர்களுக்கு அவர்களது பாரம்பரிய ஆடைகளை அணிய வைத்து ஒய்யார நடை என்னும் ரேம்ப் வாக் நிகழ்ச்சியை நடத்தினோம். கர்நாடக இசை பாடகர்கள் என்றாலே பட்டுச்சேலைகள் உடுத்துவார்கள். பட்டாடைகளை அணிவார்கள். அதனால் எங்களது நிறுவன துணிகளை அவர்கள் மூலமாக வெளியில் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியை நடத்தினோம். எங்கள் நிறுவனத்தின் வேஷ்டி மற்றும் சேலைகளை கர்நாடக இசைக்கலைஞர்கள் உடுத்தியிருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் விவாகரத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசன்னா, சினேகா பதிலளிக்கையில், திரைத்துறையில் விவாகரத்து நடப்பதை தடுக்க அறிவுரைகள் எல்லாம் சொல்ல முடியாது. எல்லோருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை நாம் மதிக்கணும், என்றனர்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அது அவருடைய சாய்ஸ். கண்டிப்பாக நல்லது பண்ணுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். கண்டிப்பாக நல்லது பண்ணுவார் என்று நாங்களும் நம்புகிறோம். நடிகர் விஜயின் பர்சனல் லைப் பற்றி நாம் பேசுகிறோம். அது அவருடைய பர்சனல் சாய்ஸ். நடிக்கிறதும் நடிக்காததும் அரசியலுக்கு வருவதும், நல்லது பண்ணனும் என்று நினைப்பதும் அவரோட பர்சனல் சாய்ஸ். அதை அவர் பண்ணுவாங்க என்று நம்புகிறோம் என்று பிரசன்னா, சினேகா தெரிவித்துள்ளனர்.





