சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் தனது முன்னாள் கணவர் தனுசை வைத்து அவர் படம் எடுத்திருந்தார். அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அன்றைய தேதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது அதனை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூட ஐஸ்வர்யா பேசியிருந்தார்.
அதில், 3 திரைப்படத்தின் போது கொலவெறி பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதாகவும், அதுவே படத்தின் விமர்சனத்தை மறைத்து விட்டதாகவும் கூறியிருந்தார். அவரது அந்த வீடியோ வைரலானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா.
இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படத்தில், விவேக் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தனுசும் இறுதிக்காட்சியில் வந்து பட்டையை கிளப்பி இருப்பார். ஆனால் இந்த திரைப்படம் அன்றைய தேதியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படியான சூழலில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தினார் ஐஸ்வர்யா.
அதன்படி லால் சலாம் திரைப்படத்தை அவர் எடுக்க, அதில் விக்ராந்த் விஷ்ணு விஷால் செந்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்தனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது.
படம் சொல்ல வந்த கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என பலரும் விமர்சனம் தெரிவித்தனர். இப்படியான சூழலில் ஐஸ்வர்யா அடுத்ததாக நடிகர் சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குரிய ஒன்லைன் கதை சித்தார்த்துக்கு பிடித்து விட்டதாகவும், இதனால் அடுத்த கட்டப் பணிகளை ஐஸ்வர்யா தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்த திரைப்படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.





