நடிகர் அஜீத்குமார், ஒரு நடிகராக தனக்கென ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு நடிப்பவர். இயக்குநர் சொல்லும் கதைகளில் நடிப்பதை விட, ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைகளில் நடிப்பதுதான் இவரது வழக்கம். இது ரஜினி, கமல், விஜய் போன்ற ஹீரோக்களுக்கும் பொருந்தும்.
அதாவது ரசிகர்களுக்கு பிடித்தமான கமர்ஷியல் விஷயங்களை படத்தில் வைத்து, ஹீரோயிசம் காட்டினால் மட்டுமே அந்த படங்களை ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால், ஹீரோவுக்காக கதை பண்ணும் இயக்குநர்கள்தான் இந்த 4 டாப் ஸ்டார் நடிகர்களை இயக்க முடியும். படைப்பாளியாக தன்னை கருதும் இயக்குநர்களுக்கு இந்த கமர்ஷியல் ஹீரோக்கள் செட் ஆக மாட்டார்கள்.
அதுபோல் சில இயக்குநர்களும், கமர்ஷியல் கடந்து தனது கனவுகளை, உணர்வுகளை, தார்மீகமாக சிந்தனைகளை மட்டுமே படமாக்கி கொள்பவர்களாக இருக்கின்றனர். அவர்களும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களை தங்கள் கதைகளில் நடிக்க அணுகுவதே இல்லை. இந்த விஷயத்தில் அந்த இயக்குநர்கள், இந்த நடிகர்கள் எதிரும் புதிருமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், மிகப்பெரிய அதிசயமாக தமிழ் சினிமாத்துறையின் மத்தியில் இன்று பரபரப்பாக பேசப்படும் விஷயம், வெற்றிமாறன் இயக்கும் படத்தில், நடிகர் அஜீத்குமார் நடிக்க போகிறார் என்பதுதான். இது பொய்யில்லை. உண்மைதான். வெற்றிமாறன் சொன்ன ஒரு வரி கதை கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்த அஜீத்குமார், இந்த படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம். அதற்கான வேலைகளை துவங்குங்கள் என்று கூறிவிட்டாராம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இதனால் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு போய்விட்டதால் வருத்தத்தில் இருந்த எல்ரெட் குமாருக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார் அஜீத்குமார்.
வாடிவாசல் படத்தில் கட்டாயம் அமீர் நடிக்க வேண்டும் என்ற நிலையில் வெற்றிமாறன் இருக்கிறார். அமீர், ஞானவேல்ராஜா பஞ்சாயத்துக்கு நீடிக்கிறது. அடுத்து மான நஷ்ட வழக்கு தொடருவதாக அமீர் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயப்போவது இல்லை என தெரிந்துக்கொண்ட வெற்றிமாறன், விடுதலை 2க்கு பிறகு, அஜீத் படத்தை இயக்க உள்ளார். அதற்கு பிறகுதான் வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.





