திருச்சியை சேர்ந்த சிவகார்த்திகேயன் படித்தது இன்ஜினயரிங், அவரது தந்தை போலீஸ் அதிகாரி. எனினும் விஜய் டிவியில் அது இது எது தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார். அந்த நிகழ்ச்சியில், எடக்கு மடக்கான கேள்வி கேட்பது, காமெடியாக பேசுவது, மிமிக்ரி செய்வது, சமயோசிதாமாக கமெண்ட் அடிப்பது என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து, பல சினிமா விருது விழா மேடைகளில் தொகுப்பாளராகவும் பேசினார். அவ்வப்போது நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்தார். மிக விரைவில் மக்கள் பார்வையில் அதிக பரிச்சயமான நபராக சிவகார்த்திகேயன் மாறினார்.
மெரினா படம் மூலம் சிவகார்த்திகேயனை நடிகராக இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் ஓவியா, அவரது காதலியாக நடித்திருந்தார், காமெடி கலந்த காதல் படமாக முதல் படத்திலேயே சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் படங்கள் அவரை முன்னிலைப்படுத்தியது.
அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், காக்கிச்சட்டை, வேலைக்காரன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகராக மாற்றியது. இப்போது தீபாவளிக்கு வெளியான அமரன் படம், அவரை வேற லெவலில் தமிழ் சினிமாவில் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
கடந்த தீபாவளியன்று வெளியான அமரன் படம், 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 104 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை முதலில் கடந்த படம் அமரன்தான் என்ற பெருமையை தந்தது. குறிப்பாக முகுந்த் மனைவி இந்து ரேபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவியின் நடிப்பு இந்த படத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமரன் படம் கடந்த 31ம் தேதி வெளியான நிலையில், 6ம் தேதியான நேற்று வரை ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இந்த 7 நாட்களில் 89.7 கோடி ரூபாயை கடந்துள்ளது, இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஞாயிறுக்குள் ரூ. 100 கோடி வசூலை தமிழ்நாட்டில் கடந்துவிட வாய்ப்புள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் வரிசையில், இப்போது 5வது டாப் ஸ்டாராக சிவகார்த்திகேயன் உருவாகி விட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.





