தமிழ் சினிமாவில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படத்தை ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது நடந்த கதைக்களம் போல் இது காட்சிப்படுத்தப்பட்டது.
அப்போது சுதந்திர வேட்கையை மட்டுமே காட்டாமல், ஆங்கிலேய பெண்ணுக்கும் தமிழ் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட காதலை மிக சுவாரசியமாகவும், அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் ஏ.எல்.விஜய். அதில் ஆங்கிலேய பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார் நடிகை எமி ஜாக்சன்.
மொழி தெரியவில்லை என்றாலும், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை அவர் வென்றார். இதன் காரணமாக எமிக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. குறிப்பாக சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ திரைப்படத்தில் கதாநாயகியாக அவர் வந்தார். அதில் அவரது நடிப்பும் பாராட்டும் வகையிலேயே அமைந்தது.
பிறகு எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வில் எமி ஜாக்சன் வந்தார். இதில் சங்கர் அவருக்கு, பெண் ரோபோ கதாபாத்திரத்தை வழங்கியிருந்தார். தனுசுடன் தங்கமகன் திரைப்படத்திலும் எமி ஜாக்சன் நடித்திருந்தார். இதேபோல் விஜயின் தெறி திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் எமி நடித்திருந்தார்.
இப்படி முக்கியமான திரைப்படங்களில் வந்து போன எமி ஜாக்சன், தமிழ் ரசிகர்களின் பிரியமான நடிகையாக உருவெடுத்தார். கடைசியாக அருண் விஜயின் சாப்டர் ஒன் திரைப்படத்திலும் அவரைப் பார்க்க முடிந்தது. ஏற்கனவே எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஆனால் தம்பதியருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் நடிகர், எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை எமி ஜாக்சன் தனது instagram ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். தனது குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் வெஸ்ட்விக் என்றும் அவர் பெயர் வைத்துள்ளார். நடிகைக்கு தமிழ் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





