பொதுவாக சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் அசைவ பிரியர்களாக தான் இருக்கின்றனர். சிக்கன் மட்டன் மீன் நண்டு இறால் காடை கௌதாரி கொக்கு என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் விதவிதமாக சமைத்து தரப்படும் அசைவ உணவுகளை ஒரு பிடி பிடிப்பதுதான் பலரது வழக்கம். பிரியாணியுடன் அசைவ வகைகளை பலரும் வெளுத்து வாங்குகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் உடல் ஆரோக்கியம் கருதி அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர். காய்கறிகள் பழங்கள் பழச்சாறுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். உள்ளூரில் ஷூட்டிங் என்றால் இன்னும் சிலர் வீட்டில் இருந்தே உணவுகளை வரவழைத்தும் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து படங்களில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த கொடி பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் துருவ் விக்ரம் நடித்த பைசன் காளமாடன் போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நான் அசைவம் குறிப்பாக மட்டன் சாப்பிடுவதில்லை என்ற ஒரு முக்கிய தகவலை அனுபமா பரமேஸ்வரன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. தெலுங்கில் கார்த்திகேயா 2 என்ற படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த சூட்டிங் நடந்த இடத்தில் ஆடுகளை வளர்க்கும் பட்டி இருந்தது. சூட்டிங் இடைவேளை நேரத்தில் அங்கிருந்த ஆடுகளுடன் நான் விளையாடுவது வழக்கம். ஒருநாள் மதியம் எங்களுக்கு சூட்டிங்கில் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது. அன்று மாலை தான் என்னுடைய உதவியாளர் மூலம் ஒரு தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
மதியம் எங்களுக்கு பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணிக்கு, நான் விளையாடிய அந்த ஆட்டை வெட்டி சமைத்துள்ளனர் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அன்று முழுவதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அன்று முதல் நான் மட்டன் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன். இப்போதும் கூட அந்த சம்பவம் என்னை சில நேரங்களில் அப்செட் செய்து விடுகிறது என்று அனுபமா பரமேஸ்வரன் அதில் கூறியிருக்கிறார்.





