ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சந்தானம். காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைத்த அவர், வெள்ளித் திரையிலும் தோன்றி தனக்கான இடத்தை அடைந்தார். தமிழ் சினிமாவின் தொண்டு தொட்டு வந்த நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் சந்தானமும் இடம்பிடித்தார்.
ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அதில் சந்தானம் இருக்கிறாரா இல்லையா என்று கேட்கும் நிலையை அவர் உருவாக்கினார். ரஜினி விஜய் அஜித் என மூத்த நடிகர்களுடன் கைகோர்த்த சந்தானம், ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தில் இருந்து விலகி, கதாநாயகனாக முடிவை எடுத்தார்.
இதில் ஆரம்ப காலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் சந்தானத்திற்கு கை கொடுக்க ஆரம்பித்தன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தில்லுக்கு துட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் சந்தானம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவின. ஆனால் அதன் பிறகு, சந்தானம் தனது முடிவை மாற்றி இருக்கலாம் என ரசிகர்களுக்கு தோன்றும் அளவுக்கு படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
வரிசையாக சந்தானம் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவ, அவருக்கு கடைசி வாய்ப்பாக வந்தது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம். சந்தானத்திற்கு வாழ்வா சாவா என்று ரசிகர்கள் குறித்து வைத்திருந்த இந்த திரைப்படம், திரையரங்குகளுக்கு சென்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. காட்சிக்கு காட்சி ஏதாவது ஒரு காமெடியை புகுத்தி அதை இயக்குனர் சுவாரசியப்படுத்தியதால் பலரும் இதனை வரவேற்றனர்.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு, வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் சந்தானத்திற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதனால் மீண்டும் நடிப்பிலேயே அவர் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் மீண்டும், டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனை தயாரிப்பது வேறு யாரும் அல்ல நடிகர் ஆர்யா தான்.
சந்தானம் ஆர்யா கூட்டணியில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருவரும் அந்த திரைப்படத்தில் அடித்த லூட்டியை, இங்கு பலரும் விரும்புகிறார்கள். இது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக தான் இந்த கூட்டணி டிடி ரிட்டர்ன்சில் இணைந்து இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கான பட பூஜை தொடங்கிய நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.





