நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் பயணத்தில் நேற்று கரூரில் நடந்த துயரச் சம்பவம் ஒரு கரும்புள்ளியாக மாறி விட்டது. அவரது அரசியல் வாழ்க்கையில் நேற்றைய தினம் ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. 9 குழந்தைகள் 17 பெண்கள் உள்பட 39 பேர் நேற்றைய பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய், காயம்பட்டவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் என நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். எனினும் இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதி தராது என்று கூறப்படுகிறது. இது விஜயின் அரசியல் பயணத்தில் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விஜய் பலமுறை தனது கட்சியினருக்கு அறிவுரை சொன்னார். என் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்றார். கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள் என்னுடைய கூட்டங்களுக்கு வர வேண்டாம் என்றும் கட்டுப்பாடு விதித்து அறிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக சிறுவர் சிறுமிகளை, குழந்தைகளை என் கூட்டங்களுக்கு பெற்றோர் அழைத்து வர வேண்டாம். வீட்டில் இருந்து டிவியில் மட்டும் பாருங்கள் என்றும் பல அறிவுரைகளை வழங்கினார். இராணுவ கட்டுப்பாட்டோடு கூட்டங்களில் பாதுகாப்பாக கவனமாக கலந்துக்கொள்ள வேண்டும். போக்குவரத்தான பகுதிகளில் அதிக கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
ஆனால் இதை எல்லாம் பெரும்பாலான மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்தில் பல குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. இளம்பெண்கள் வயதான பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். விஜய் பலமுறை அறிவுரை சொல்லியும் கண்டிசன் போட்டும் அதை மீறி மக்கள் கூட்டங்களில் அலட்சியமாக பாதுகாப்பு குறித்த கவனமின்றி பங்கேற்றனர்.
எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க மாலை 6 மணிக்குள் பிரசார பயண கூட்டங்களை நடத்தி முடித்துவிட வேண்டும் என்றுதான் விஜய் திட்டமிட்டார். ஆனால் அவர் செல்லும் வழித்தடம் எல்லாம் மக்கள் கூட்டம் காத்திருந்து முண்டியடித்து அவரது பல மணி நேரத்தை வீணாக்கி விட்டதால் இரவு நேரம் வரை கரூரில் விஜய் பேச தாமதம் ஏற்பட்டது. மக்களின் இந்த பொறுப்பற்ற செயல்பாடுகளால் இப்போது கரூரில் அந்த துயர சம்பவம் நடந்து பிஞ்சு குழந்தைகளை எல்லாம் இழந்துவிட்டோம் என்று ப்ளு சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருக்கிறார்.





