இன்று சென்னையில் முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கலைஞர் 100 என்ற விழாவை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இணைந்து நடத்துகிறது, இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த நட்சத்திர நடிகர் நடிகைகளும் பங்கேற்க உள்ளனர்.
இதில் இயக்குநர் விஜய் இயக்கிய கருணாநிதி குறித்த ஆவணப்படம், குறு நாடகங்கள், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி இவ்விழா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம்புயல் காரணமாக ஏற்பட்ட மழையால், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் விழா ஒத்திவைக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது.
தமிழ் சினிமா நடிகர் நடிகையர் மட்டுமின்றி பிறமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் எடுக்கப்படும் பல படங்கள். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் எடுக்கப்படுகிறது. அதற்கு காரணம் அங்கு சகல வசதிகள் கொண்டதாக அந்த பிலிம் சிட்டி 2500 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டில் ராமோஜி ராவ் உருவாக்கிய இந்த திரைப்பட நகரம் உலகளவில் மிகப்பெரிய பிலிம்சிட்டி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இங்கு ஒரே நேரத்தில் 20 படங்களில் படப்பிடிப்புகளை நடத்த முடியும். லண்டன் தெரு, ஜப்பானிய தோட்டங்கள், விமான நிலையம், மருத்துவமனை, இயற்கை காட்சிகள், ஆய்வகங்கள் என சகல வசதிகளும் காணப்படுகின்றன.
எனவே, தமிழ் சினிமா துறையினருக்கு மிகவும் உதவும் வகையில் குயின்ஸிலேண்ட் பகுதிக்கு அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் உருவாக்கும் திட்டத்தை, இன்றைய கலைஞர் 100 விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அடுத்து , தரமணி திரைப்பட நகரமும், புதுபொலிவாக்கப்பட உள்ளது. அங்குள்ள 4 ப்ளோர்களும் புதுப்பித்துக் கட்டப்படுகின்றன. அருகில் பரந்தூரில் விமானநிலையம் வர உள்ளதால், இந்த புதிய திரைப்பட நகருக்கு வெளிமாநிலங்களில் இருந்து நடிகர், நடிகைகள் வந்து செல்ல போக்குவரத்து சிரமங்களும் இருக்காது. அந்த அறிவிப்பை இன்று வெளியிட உள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





