நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல திரைக்கலைஞனாக தன்னை வெளிப்படுத்தியவர். புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கான தனி அடையாளமே இல்லாமல் ஒரு துணை நடிகராக தான் சில காட்சிகளில் தெரிவார்.
அதன்பிறகு பீட்சா, தென்மேற்கு பருவக்காற்று, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்கள்தான், விஜய் சேதுபதிக்கு நல்ல அறிமகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. பிறகு சூது கவ்வும், பீட்சா, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, காதலும் கடந்து போகும், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னிலை பெற்றார்.
ஒரு கட்டத்தில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும், கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்திலும், ஷாருக்கானுக்கு வில்லனாக இந்தியில் ஜவான் படத்திலும் நடித்து, சகல தரப்பு ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகராக தன்னை நிரூபித்து இருக்கிறார். இதுதவிர நல்ல கதையுள்ள, சமூக பொறுப்பு நிறைந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் திடீரென அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியும் ஹீரோவாக களத்தில் இறங்கியிருக்கிறார். அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் என்ற புதுப்படத்தில் அறிமுக நாயகனாக நடிக்கும் சூர்யா சேதுபதி, படத்தின் துவக்க விழா பூஜையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய விதமும், அவர் நடந்துக்கொண்ட விதமும், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் விடுலை 2 படத்திலும் சூர்யா விஜய்சேதுபதி ஒரு கேரக்டரில் நடிப்பது தெரிய வந்துள்ளது. இவ்வளவு தூரம் தமிழ் சினிமாவில் அடிபட்டு, முன்னேறிய விஜய் சேதுபதிக்கு தன் மகனை எப்போது படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியவில்லையே என்று பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் ஹீரோ அந்தஸ்தை இழந்து, மார்க்கெட் இன்றி ஒதுக்கப்படும் நேரத்தில்தான் தனது மகனை, ஒரு பெரிய நடிகர் களத்தில் இறக்கி விட வேண்டும். நடிகர்கள் கார்த்திக், முரளி, பிரபு, விஜயகாந்த், டி. ராஜேந்தர், சத்யராஜ் போன்ற பலரும் அப்படித்தான் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு அறிமுகம் செய்தனர். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக களத்தில் இருக்கும்போதே மகனும் ஹீரோ என்றால் ரசிகர்களின் மனநிலை அதை ஏற்குமா, அதே வேளையில் கத்துக்குட்டித்தனமாக பேசும் மெச்சூரிட்டி இல்லாத மகனுக்கு ஆதரவாக, அவரே முன்நின்று மகனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதுதானே முறை, இதுவும் பண்ணலையே என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





