நடிகர் தனுஷ் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி. அதில் முதியோரின் நிலைமையையும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் இளம் வயது காதலையும் அற்புதமாக காட்சிப்படுத்தி அசர வைத்திருந்தார் தனுஷ். படத்தின் பாடல்களும் ஹிட்டாக, பவர் பாண்டி தனுஷிற்கு பாஸ் மார்க் கொடுத்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 50 ஆவது திரைப்படமான ராயனில் தனுஷ் இயக்கி நடித்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சரவணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் நடித்திருந்தது.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் இல்லை என்று தான் கூற வேண்டும். கேங்ஸ்டர் திரைப்படம் வடசென்னையை மையமாக கொண்ட களம் என பலரும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு கற்பனை கோட்டை கட்டி இருந்தார்கள்.
ஆனால் அதில் எந்த ஒரு காட்சியும் படத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை எரிச்சல் அடையவே செய்தது. தர்மதுரை பாணியில் அண்ணனுக்கு துரோகம் செய்யும் தம்பிகள், அண்ணனுடன் கூடவே இருந்து சகோதரர்களை கொல்லும் துஷாரா விஜயன் என படம் முழுக்க ரத்தக்கறைகள் மட்டுமே மிஞ்சி இருந்தன.
வன்முறை காட்சிகள் மிக தூக்கலாக இருக்க, தனுஷின் இயக்கமும் அந்த அளவு எடுபடவில்லை என்றுதான் விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த திரைப்படம், சராசரி திரைப்படம் ஆகவே அமைந்தது. ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்பது தான் இது உண்மை. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷின் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
மேலும் படத்திற்கான வசூல் எதிரி கொண்டே போக, மகிழ்ச்சி அடைந்த தனுஷ் சினிமா பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளித்தார். இப்படியான சூழலில், ராயன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதமே முடியாத சூழலில், அதற்குள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.





