தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களை தொடர்ந்து தந்தவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த அட்லி ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தில் ஆர்யா ஜெய் நயன்தாரா நஸ்ரியா சத்யராஜ் சத்யன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்தார். இந்த 3 படங்களுமே பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாக அமைந்தன.
தெறி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் சமந்தா ஜோடியாகவும் நடித்திருப்பார். பிகில் படத்தில் விஜய் கால்பந்தாட்ட வீரராகவும் ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். மெர்சல் படத்தில் விஜய் டாக்டராக நடித்திருப்பார். இதில் 2 வேடங்களில் விஜய் நடித்திருந்த நிலையில் ஒருவருக்கு காஜல் அகர்வாலும் இன்னொரு விஜய்க்கு நித்யா மேனனும் ஜோடியாக நடித்திருந்தனர். அட்லி இயக்கிய இந்த 3 படங்களுமே அட்லிக்கு பெரிய நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு இந்தியில் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. இதில் பிரியாமணி நயன்தாரா விஜய் சேதுபதி யோகிபாபு போன்ற தமிழ் நடிகர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்தனர். இந்த படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தியிலும் அட்லிக்கு இமேஜ் எகிறியது.
சமீபத்தில் மத்திய அரசு 71வது தேசிய விருதுகளை அறிவித்துள்ள நிலையில் ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது அறிவித்துள்ளது. இப்போது அட்லி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் படத்தை இயக்க எப்படி தனக்கு வாய்ப்பு வந்தது என்பது குறித்து இயக்குனர் அட்லி பேசியிருக்கிறார்.
ஒரு நேர்காணலில் இயக்குனர் அட்லி கூறியதாவது, நான் விஜய் சாரோடு நண்பன் படத்தில் வேலை செய்த போது அவருடைய ரசிகன் கிடையாது. அவரோடு தினமும் இருக்க இருக்க அவருடைய கேரக்டர் மற்றும் ஒரு மனிதனை அவர் நடத்தும் விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்ப நான் பார்க்க ரொம்ப சுமாரா இருப்பேன். அந்த அளவுக்கு அறிவும் கிடையாது.
ஆனால் என்னுடைய வேலை அவருக்கு பிடித்து விட்டது. நண்பன் படத்தின் கடைசி நாள் சூட்டிங் அப்போ என்னை அவருடைய கேரவனுக்கு அழைத்து பேசினார். உங்களுடைய வேலை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்க வேலை செய்யும் விதமும் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு கதையோடு வாங்க பார்ப்போம் என்று என்னை பார்த்து சொன்ன முதல் ஹீரோ விஜய் அண்ணன் தான் என்று இயக்குனர் அட்லி கூறி இருக்கிறார்.





